நாட்டின் நிதிப்பற்றாக்குறை மத்திய அரசின் இலக்கான ரூ.6.24 லட்சம் கோடியை எட்டியது
2018-19 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கை ரூ.6.24 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்திருந்தது.
டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கில் அக்டோபர் மாதத்திலேயே இலக்கு எட்டப்பட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2018-19 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கை ரூ.6.24 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. ஆனால் அரசின் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்து வருவதால் நிதிப் பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.

அரசின் வருவாய்க்கும் செலவுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் நிதிப் பற்றாக்குறை. வருமான வரி வசூல் அதிகரிப்பு, அரசின் பங்குகள் விற்பனை ஆகியவை எதிர்பார்த்ததைவிட சிறப்பான முறையில் இருப்பதால், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கான 3.3 சதவிகிதம் என்ற இலக்கில் எந்த மாற்றமும் இல்லை என்று கடந்த மாதம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார்.
2017-18ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டது. முன்பு இது 3.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. 2018-19ஆம் நிதியாண்டு இலக்கான 3.3 சதவிகித ஜிடிபி என்பது 6.24 லட்சம் கோடி ரூபாய்.
அது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதமே 85 சதவிகித இலக்கை எட்டியது. அக்டோபர் மாதத்திற்குள் ரூ.6.48 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த அளவானது பட்ஜெட் மதிப்பீட்டில் 103.9 சதவிகிதமாகும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்ததே இந்த நிதி பற்றாக்குறை அதிகரிப்புக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
அக்டோபர் மாத இறுதியில் பற்றாக்குறையானது பட்ஜெட் மதிப்பீட்டில் 96.1 சதவிகிதமாக இருந்தது. அரசின் வருவாயைப் பொறுத்தவரையில், ஏப்ரல் - அக்டோபரில் ரூ.7.88 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது பட்ஜெட் இலக்கில் வெறும் 45.7 சதவிகிதம் மட்டுமே. சென்ற ஆண்டின் இதே காலத்தில் பட்ஜெட் இலக்கில் 48.1 சதவிகித அளவு வருவாய் ஈட்டப்பட்டிருந்தது.
இந்த நிதியாண்டில் அரசு மொத்தம் ரூ.17.25 லட்சம் கோடியை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகப் பொதுக் கணக்காய்வாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications