பேங்க் அக்கவுண்ட் உங்களோடததுதான், ஆனா அதில் இருக்கும் பணம் உங்களோடது இல்லை!
நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு மசோதாவை (Financial Resolution and Deposit Insurance-FRDI Bill 2017) என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
டெல்லி: வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் திவாலாவதை தடுக்கும் வகையில் அவற்றை மீட்டெடுக்கும் வகையில் நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு மசோதாவை (Financial Resolution and Deposit Insurance-FRDI Bill 2017) என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் புதிய நிதித் தீர்வு சட்டத்தால், இனி வரும் காலங்களில் சாதாரண மக்களுக்கு வங்கிகளில் பணத்தை சேமிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு அழித்துவிடும் போல் உள்ளது.
படையப்பா படத்தில் வரும் மாப்பிள்ளை இவருதான், ஆனா, இவரு போட்டிருக்கும் சட்டை அவரோடது இல்லை என்ற வசனத்தை போலத்தான் மத்திய அரசு தற்போது கொண்டுவரவிருக்கும் புதிய நிதித் தீர்வு சட்டமாகும்.
மத்திய அரசின் மசோதா
பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கியில்லா நிதிச் சேவை நிறுவனங்கள் திவாலாவதை தடுக்கும் வகையில் மத்திய அரசானது அவற்றை காப்பாற்றும் வகையில் புதிதாக “நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு மசோதாவை (Financial Resolution and Deposit Insurance-FRDI Bill 2017) என்ற மசோதாவை கொண்டு வந்துள்ளது
திவாலாவதை தடுக்க நடவடிக்கை
இந்த மசோதா கடந்த ஆகஸ்டு மாதம் லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது பாராளுமன்ற கூட்டுக்குழவின் பரிசீலனையில் உள்ளது, இந்த மசோதா கொண்டுவரப்படுவதன் நோக்கமே, வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் திவாலாவதை தடுக்கும் வகையில் அவற்றை மீட்டெடுக்கும் வகையில், அதற்கான வழி முறைகளை வகுக்கும் மசோதாவாகும்.
சேமிப்புத் தொகை
மசோதா நிறைவேற்றப்படுமானால், வங்கிகள் மற்றும் நிதச் சேவை நிறுவனங்கள் திவாலானால், அந்த வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக போடப்பட்டுள்ள சேமிப்பு தொகைகள், நீண்ட கால வைப்பு தொகைகள் மற்றும் முதலீடுகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன.
மக்கள் பணம் யாருக்கு
சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் வருங்கால பாதுகாப்புக்காகவும், தங்களின் வாரிசுகளின் உயர்கல்விக்காகவும் தேவையான பணத்தை பெரும்பாலும் வங்கி வைப்பு நிதியாகத்தான் போட்டு வைக்கின்றனர். இந்த நிதித் தீர்வு மசோதா நடைமுறைக்கு வருமானால், அதிகம் பாதிக்கப்படப்போவது என்னவோ இவர்கள்தான்.
சிட்பண்டுகளில் குவியும்
இனிமேல், சாதாரண மக்கள் பெரும்பாலும் வங்கிகளை தவிர்த்துவிட்டு தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் சிட்பண்டு கம்பெனிகளில் தங்களின் பணத்தை போடத் தொடங்குவார்கள். சாதாரண பாமர மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி பணத்தை பறிப்பதற்காக ஆங்காங்கே போலியாக நிதி நிறுவனங்களும் சிட் பண்டு நிறுவனங்களும் முழைக்கும். பாமர மக்களும் தங்களின் பணத்தை இவற்றில் போட்டுவிட்டு ஏமாறுவது தொடர்கதையாக நடக்கும்.
அருண் ஜெட்லி விளக்கம்
ஆனால், மத்திய அரசு தரப்பில் கூறும்போது அவ்வாறெல்லாம் நடக்காது என்று தெரிவிக்கின்றனர்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறும்போது, பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தும் நோக்கில் 2.11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு முதலீடு செய்துவருகிறது.
பணத்திற்கு பாதிப்பில்லை
தற்போது வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் ஏற்பட்டால் அவற்றை காப்பாற்றுவதற்காகன வழிமுறைகளை வகுப்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வங்கிகளில் போட்டு வைத்துள்ள வைப்புகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் பணத்தை பாதுகாப்பதற்காக வழிமுறைகளை மத்திய அரசு வகுக்கும் என்று தெரிவித்தார்.
எந்த விதத்தில் நியாயம்
வங்கிகளை ஏமாற்றி கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி குவித்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டவர்களிடம் இருந்து கடன்களை வசூலிப்பதற்கு தேவையான சட்டத் திருத்தங்களை ஏற்படுத்தாமல், பாமர மக்களின் அடிவயிற்றில் கை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பாமரன் கேட்பது எட்டாத தூரத்தில் உள்ள மத்திய அரசுக்கு எப்போது கேட்கும் என்று தெரியவில்லை.