ஆப்பிள்-ஐ நம்பிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.. பாக்ஸ்கான் எடுத்த முடிவு.. சென்னை பேக்டரியில் மாற்றம்!
தைவான் நாட்டின் முன்னணி உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் (ஹான் ஹாய் பிரிசிஷன்) தனது வர்த்தக மாடலை முழுமையாக மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஐபோன் தயாரிப்பாளராக அறியப்படும் ஃபாக்ஸ்கான், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மைய புள்ளியாக மாற முயற்சி செய்து வருகிறது. இந்த மாற்றம் நிறுவனத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல தசாப்தங்களாக ஃபாக்ஸ்கான், உலகின் பெரிய எலக்ட்ரானிக் உற்பத்தியாளராக இருந்து வந்தது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை பெருமளவில் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வந்தது.

ஆனால் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையின் வளர்ச்சி மந்தமாகி வரும் நிலையில், ஃபாக்ஸ்கான் தனது வருமானத்தை ஆப்பிள் நிறுவனத்தை மட்டுமே சார்ந்து இருந்தால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையில் சிக்கிகொள்ளக்கூடும் என்பதை உணர்ந்தது. இந்த நிலையில் மாற்று வர்த்தகத்தை தேட துவங்கியது.
இதற்காக AI தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் உத்தியை நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தற்போது ஏஐ தொழில்நுட்பமும், அதை சார்ந்த வர்த்தகம் தான் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பாக்ஸ்கான் இப்பிரிவில் கவனத்தை செலுத்த துவங்கியது.
AI சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர்
ஃபாக்ஸ்கான் AI சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர் உபகரணங்களை தயாரிக்கும் திட்டத்தில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இவை AI அமைப்புகளுக்கு அடிப்படை உள்கட்டமைப்பாக செயல்படுகின்றன.
வழக்கம் போல் வெறும் மக்களின் பயன்பாட்டுக்காக வரும் சாதனங்களை மட்டும் தயாரிப்பதற்கு பதிலாக, தொழில்நுட்பத்தின் ஆழமான அடுக்கில் நுழைந்து அதிக லாபம் தரும் வியாபாரத்தில் ஈடுபட பாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் AI திறன்களை வேகமாக வளர்த்து வரும் நிலையில், சக்திவாய்ந்த ஏஐ சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர்களுக்கான தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதை முக்கிய வர்த்தகமாக மாற்றி 40 சதவீதம் வருமான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது பாக்ஸ்கான்.
AI உடன் சேர்த்து ஃபாக்ஸ்கான் எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மற்றும் செமிகண்டக்டர் துறைகளிலும் முதலீடு செய்து வருகிறது. இதற்கான பலனும் தற்போது பாக்ஸ்கானுக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
தமிழ்நாடு
இந்தியாவில் பாக்ஸ்கான் மிகப்பெரிய தொழிற்சாலையை சென்னையில் வைத்திருக்கும் நிலையில், விரைவில் தமிழ்நாட்டிலும் வெறுமனே ஸ்மார்ட்போன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தாண்டி ஏஐ சர்வர்கள், டேட்டா சென்டருக்கான உபகரணங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மற்றும் செமிகண்டக்டர் துறைக்கான உற்பத்தியும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications