மன்னா ஃபுட்ஸ் நிறுவனத்தில் மோரகன் ஸ்டாலின் ரூ.152 கோடி முதலீடு!
சென்னை: தென்னிந்தியாவில் இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் மன்னா ஃபுட்ஸ் (Manna Foods) நிறுவனத்தில், மோர்கன் ஸ்டாலின் பிரைவேட் ஈக்கியூட்டி ஆசியா (Morgan Stanley Private Wquity Asia) ரூ.152 கோடியை முதலீடு செய்துள்ளது.
இதுகுறித்து மன்னா ஃபுட்ஸ் நிறுவனர் ஐ.எஸ்.ஏ.கே நாசர் கூறியதாவது: உடலுக்கு ஆரோக்கியமான 'மன்னா ஹெல்த் மிக்ஸ்' (Manna health Mix) உள்ளிட்ட பிரத்யேக உணவு பொருட்களை தயாரித்து அளிப்பதில் எங்களது மன்னா ஃபுட்ஸ் முன்னிலையில் உள்ளது. செயற்கை உணவு பொருட்களை தவிர்த்து இயற்கையான பாரம்பரியமிக்க உணவுப் பொருட்களை விரும்புபவர்களுக்கு தேவையான உணவு வகைகளை தயாரித்து வழங்குவதை இலக்காக கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மேலும் நாங்கள், ஊட்டசத்து மிகுந்த தானியங்கள், பறுப்பு வகைகளை உள்ளடக்கிய 'சத்து மாவு' விற்பனையில் முன்னிலையில் உள்ளோம். இதனை உடனடியாக சமைத்து, சூடான பாலுடன் கலந்து அருந்தலாம். இது தவிர எங்களது நிறுவனம் தானியங்கள் நிறைந்த குழந்தைகள் உணவு பொருட்கள், சோயா உணவு, உலர் பழங்கள், பியூரிஸ் அண்ட் பேஸ்ட் (purees and pastes) வகைகள் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் எங்களது நிறுவனத்தில் ரூ. 152 கோடியை முதலீடு செய்து எங்களுடன் பங்குதாரராக இணைந்துள்ளது, இந்திய சந்தையில் ஆரோக்கிய உணவு பொருள்களை பரவலாக கொண்டு செல்ல வலு சேர்ப்பதாக இருக்கும். குறிப்பாக, தென்னிந்தியாவில் எங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்திக் கொள்ளப்படும்" என்றார்.
மோர்கன் ஸ்டான்லி பிரைவேட் ஈக்கியூட்டி ஆசியாவின் இணை தலைவர் திரு. அர்ஜூன் செய்கல் கூறுகையில், "வாடிக்கையாளர்களுக்கு இயற்கையான, ஆரோக்கியமான உயர்தர தயாரிப்புகளை தயாரித்து வழங்குவதில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மன்னா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இந்தியாவின் இன்றைய உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை உடல் ஆரோக்கியத்துக்கு சவாலாக மாறியுள்ள சூழ்நிலையில், மன்னா நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து செயல்படுவது என்பது அந்த நிறுவனத்தின் இயற்கை உணவு தயாரிப்புகள் பெரும்பாலான வாடிக்கையாளர்களை சென்றடைய பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் வலுவாக கால்பதிக்க பக்கபலமாக இருக்கும். உள்நாட்டில் விளையும் தானிய வகைகளைக் கொண்டு சத்தான உணவுப் பொருள்களை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க உதவும். மன்னாவின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல இந்த கூட்டு முயற்சி உதவும்" என்று தெரிவித்தார்.
மன்னா ஃபுட்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க திட்டங்களுக்காக, கடந்த 2015-ஆம் ஆண்டு ஃபுல்கிரம் (Fulcrum) நிறுவனத்திடமிருந்து ரூ. 30 கோடியை ஏற்கெனவே பெற்றுள்ளது.
"திரு. நாசர் அவர்களின் சீரிய தலைமையில் கடந்த 2 ஆண்டுகளாகவே மன்னா ஃபுட்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி சிறப்பான அளவில் மேம்பட்டு வருகிறது. இந்த நிலையில், மோர்கன் ஸ்டான்லியுடனான இந்த கூட்டு நடவடிக்கை வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையில் அந்த நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை மேலும் அதிகரிக்க உதவும்" என்று ஃபுல்கிரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு. ஈதன் காத்ரி தெரிவித்தார்.
RECOMMENDED STORIES