இந்தியாவுக்கு வார்னிங் கொடுத்த கீதா கோபிநாத்.. மக்களே இது உஷாரா இருக்க வேண்டிய நேரம்!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநரும், பொருளாதார பேராசிரியருமான கீதா கோபிநாத் இந்தியப் பொருளாதாரத்துக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் ஜூன் மாதம் வரை தொடர்ந்தால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 140 டாலர் வரை உயர வாய்ப்பு உள்ளது என்று கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் பெரிய அளவில் உயரும், பணவீக்கம் அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாகும் என்று எச்சரித்துள்ளார்.

சப்ளை ஷாக்
கீதா கோபிநாத் அளித்த பேட்டியில், தற்போதைய பொருளாதார நெருக்கடி வெறும் விலை உயர்வு மட்டுமல்ல, முழுமையான பொருட்கள் பற்றாக்குறை சப்ளை ஷாக் என்ற நிலைக்கு மாறியுள்ளது என கூறினார். இதனால் எந்தொரு நாடாக இருந்தாலும் விலையை கட்டுப்படுத்துவது கடினம் எனவும் விளக்கினார்.
இதனால் கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட துவங்கியுள்ளது. இந்தியா எரிபொருளுக்கு மத்திய கிழக்கு நாடுகளை அதிகம் நம்பியுள்ளது. எனவே இது வெறும் விலைப் பிரச்சனை அல்ல, பொருட்கள் கிடைக்காத நிலையில் பெரும் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது என்று கீதா கோபிநாத் விளக்கினார்.
கச்சா எண்ணெய் விலை
உலக அளவில் முக்கிய எரிபொருள் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் கடல்சந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமே இந்த நிலைக்கு காரணம். ஈரான் போரில் ராணுவ தாக்குதல் விரைவில் தணிந்தாலும், சப்ளை செயின் இயல்பு நிலைக்கு திரும்ப இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என்று அவர் கூறினார்.
தற்போதைய 110 டாலர் அளவிலான கச்சா எண்ணெய் விலையை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டுமானால், உலகளவில் தேவை பெரிய அளவில் குறைய வேண்டும். இல்லையெனில் ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 140 டாலருக்கு அருகில் செல்லும் வாய்ப்பு அதிகம் என்றும் கீதா கோபிநாத் சுட்டிக்காட்டினார்.
இந்த விலை உயர்வு இந்தியாவில் போக்குவரத்து, உற்பத்தி மற்றும் உர விலைகளை நேரடியாக உயர்த்தும். இதனால் பணவீக்கம் அதிகரிக்கும், ரூபாய் மதிப்பும் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதில் இருந்து மக்களை முழுமையாகப் பாதுகாக்க முடியாது என்று கீதா கோபிநாத் தெளிவுபடுத்தினார்.
பெட்ரோல் விலை உயர்வு மூலம் மக்கள் மத்தியில் தானாக பயன்பாட்டு அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் அரசு அதிக நிதி பற்றாக்குறையை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் விலை உயர்வில் சில பகுதியை மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுதான் தீர்வ என அவர் அறிவுறுத்தினார்.
ரூபாய் மதிப்பு
இனி வரும் மாதங்களில் உலக நாடுகளில் பணவீக்க தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கீதா கோபிநாத் எச்சரித்தார். "நாம் பணவீக்கம் மெல்ல மெல்ல உயரும் கட்டத்துக்குள் நுழைந்துள்ளோம்" என்று அவர் கூறினார். ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 91-லிருந்து 97 வரை சரிந்துள்ள நிலையில், 100-ஐத் தாண்டும் என்கிற அச்சம் முக்கியமல்ல என கீதா கோபிநாத்.
நாணய மாற்று விகிதம் முக்கியமல்ல. நாட்டின் வேலைவாய்ப்பு, பணவீக்கம் மற்றும் வளர்ச்சியே முக்கியம் எனவும் விளக்கினார். ரூபாய் மதிப்பு குறைவது மூலம் இறக்குமதியை குறைக்க வழிகளை தேட முடியும் என்றும் கீதா கோபிநாத் விளக்கினார்.
இத்தகைய சூழ்நிலையில் ரூபாய் மதிப்பை பாதுகாக்க அதிகப்படியான தலையீடு செய்யக்கூடாது என்று அவர் எச்சரித்தார். "தலையீடு செய்தால் வெளிநாட்டு நிதி இருப்பு அதிகமாக இழக்க நேரிடும்" என்றும் விளக்கினார்.
அரசு செய்ய வேண்டியது என்ன?
தற்போது பொருளாதார பாதிப்பில் பாதிக்கப்படும் சாமானிய குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு உதவ வேண்டும் என்று கீதா கோபிநாத் பரிந்துரைத்தார். குடும்பங்களுக்கு அதிக பண உதவி (கேஷ் டிரான்ஸ்ஃபர்), சிறு நிறுவனங்களுக்கு உத்தரவாதக் கடன்கள் மற்றும் பணப்புழக்க உதவி தேவை என கூறினார்.
மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பே MSME நிறுவனங்களுக்கு உதவ சுமார் 2.5 லட்சம் கோடி மதிப்பிலான உத்தரவாத கடன் திட்டத்தை அறிவித்தார்.
இறுதியாக, இந்தியா முழு பொருளாதார நெருக்கடிக்குள் செல்கிறது என்ற கருத்தை கீதா கோபிநாத் நிராகரித்தார். உள்நாட்டு தேவை வலுவாக உள்ளது, உள்கட்டமைப்பு செலவுகள் தொடர்கின்றன, வெளிநாட்டு நிதி இருப்பு ஆரோக்கியமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"இந்த ஈரான் மோதல் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் 140 டாலருக்கு செல்லும் பட்சத்தில் இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே பிரச்சனை" என கூறினார் கீதா கோபிநாத்.












Click it and Unblock the Notifications