சீன பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி, வர்த்தகம் நிறுத்தம்- இந்திய பங்குச் சந்தையிலும் சரிவு
டெல்லி: சீன பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு அதிரடியாக 7 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக சீன பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தைகளும் நான்காவது நாளாக கடும் சரிவுடன் தொடங்கியுள்ளன.
சீன பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும் குறிப்பாக வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியுள்ளதால் உலகளவில் பதட்டமான சூழல் நிலவியது. இதனால் உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவை கண்டதால் இந்திய பங்குச்சந்தைகளும் சரிந்தன.டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் 23 காசு சரிவுடன் 66.82 காசுகளாக இருந்ததும், சந்தைகளின் சரிவை அதிகப்படுத்தியது.
ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஷாங்காய் கூட்டு குறியீடு 0.62% உயர்ந்துள்ளபோது, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.95% ஜப்பான் நாட்டின் நிக்கேய் 1.62% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.06% உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன தொழில்துறை உற்பத்தி மந்தம், ஈரான்-சவுதி இடையே ஏற்பட்டுள்ள பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 தினங்களாவே பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. சீன பங்குச்சந்தைகள் கடந்த 4ம் தேதி கடும் வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் தாக்கம் ஆசிய சந்தைகளில் எதிரொலித்தது.
ஆசியாவின் முக்கிய பங்குச்சந்தைகளில் ஒன்றான ஷாங்காய் மற்றும் ஷென்ஜென் பங்குச்சந்தைகள் 5 சதவீத்திற்கு மேல் சரிந்ததால் கடந்த 4ம் தேதி தற்காலிகமாக சிறிது நேரம் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டன.
சீன பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு இன்றும் அதிரடியாக 7 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக சீன பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் தொடங்கியுள்ளன. வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 301.03 புள்ளிகள் சரிந்து 25105.30 புள்ளிகளாக உள்ளது. மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7648.90 புள்ளிகளாக சரிந்து காணப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியும் 28 மாதங்களில் இல்லாத வகையில் டிசம்பர் மாதம் குறைந்தது. ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் லாபம் கருதி பங்குகளை விற்பனை செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அணு குண்டை விட அதி பயங்கரமான ஹைட்ரஜன் வெடிகுண்டை வடகொரியா சோதித்து பார்த்துள்ளது. இது குறித்து அந்நாட்டு தொலைக் காட்சியில் வெளியான செய்தியில், "வடகொரியா ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக நடத்தி விட்டது. இதன் மூலம் அணுசக்தியில் வடகொரியா அடுத்தக்கட்டத்துக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே இதை பயன்படுத்துவோம்" என்று தெரிவிக்கப்பட்டது. வடகொரியா ஹைட்ரஜன் வெடி குண்டு சோதனை நடத்தியதற்கு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் அனைத்து முக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனை உலக அளவில் பங்குச்சந்தைகளை ஆட்டம் காணச்செய்து மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.