நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி!
சென்னை: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசு, நிர்வாகச் சீர்திருத்தங்களை நோக்கிய தனது முதல் அதிரடி பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்ட டெண்டர்களை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ள நிலையில், இனி நகராட்சி நிர்வாக டெண்டர்கள் அனைத்தும் முற்றிலும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என நகராட்சி நிர்வாக இயக்குநரக கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி சர்குலர் அனுப்பியுள்ளார்.

ஒப்பந்தங்கள் ரத்து
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசு, முந்தைய திமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கான டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்திவைத்துள்ளது. குறிப்பாக, கடந்த மே 13 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட அல்லது இறுதி செய்யப்பட்ட அனைத்துக் குறுகிய கால ஒப்பந்தங்களையும் உடனடியாக ரத்து செய்யவோ அல்லது நிறுத்திவைக்கவோ தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குச் சற்று முன்பும், அதற்குப் பிந்தைய இடைப்பட்ட நாள்களிலும் பல்வேறு அரசுத் துறைகளில் அவசர அவசரமாகக் குறுகிய கால டெண்டர்கள் கோரப்பட்டதாகப் புதிய அரசுக்குப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்ற முக்கியத் துறைகளில், உரிய கால அவகாசம் வழங்கப்படாமலும், விதிமுறைகளை மீறியும் ஆன்லைன் டெண்டர்கள் சில மணி நேரங்களிலேயே முடிவடைந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, கடந்த மே 13 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் இறுதி செய்யப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட அனைத்துக் குறுகிய கால ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ தவெக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெண்டர்கள் இனி ஆன்லைனில் மட்டுமே
இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டெண்டர் நடைமுறைகளிலும், கட்டட திட்ட அனுமதிகளிலும் முறையான சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், டெண்டர் செயல்முறைகளில் விண்ணப்பதாரர்களின் விவரங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்புள்ள கள ஆய்வு சான்று மற்றும் உபகரணங்களின் இருப்புச் சான்றை இனி கட்டாயம் கேட்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்வைப்புத்தொகை மற்றும் பாதுகாப்புத்தொகையை ஆன்லைன் முறையில் மட்டுமே பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்களை தேவையின்றி நேரில் வரவழைக்கப்படக் கூடாது என்றும் கட்டட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை வேண்டும் எனவும் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
கட்டட அனுமதிக்கு கெடு
பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் கட்டட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது தேவையற்ற காலதாமதம் செய்யக் கூடாது என்றும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய காலத்திற்குள் அதன் மீது அதிகாரிகள் இறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த சுற்றறிக்கையில் ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே டெண்டர் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தவெக அரசு எடுத்துள்ள இந்த டிஜிட்டல் அதிரடி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications