"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பலமான கட்சியாக வலம் வந்த அதிமுக தற்போது பெரும் சோதனையில் சிக்கி உள்ளது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி உள்பட 10 தென்மாவட்டங்களில் மொத்தம் 58 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் வெறும் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே அதிமுகவில் உள்ளனர். இந்த பரிதாப நிலையில் தென்மாவட்டங்களில் உள்ள 2 எம்எல்ஏக்களின் விவரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் தென்மாவட்டங்கள் என்றால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என 10 மாவட்டங்கள் அழைக்கப்படுகின்றன.

இதில் மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் தலா 7 சட்டசபை தொகுதிகள், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 6 சட்டசபை தொகுதிகள், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தலா 5 சட்டசபை தொகுதிகளும், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 4 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
மொத்தமாக இந்த 10 தென்மாவட்டங்களில் 58 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியில் இசக்கி சுப்பையா, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் தளவாய் சுந்தரம் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
மற்ற அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். தென்மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக இருந்த மதுரையை சேர்ந்த ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விருதுநகரின் ராஜேந்திர பாலாஜி, தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் ராஜூ, திருநெல்வேலியில் தச்சை கணேஷ் ராஜா, தென்காசி மாவட்டத்தில் செல்வமோகன் தாஸ் பாண்டியன், குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி உள்ளிட்டோர் தோல்வியை தழுவினர்.
இதற்கிடையே தான் சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியினரும், எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் இன்னொரு அணியினரும் செயல்பட்டனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்ளார். மற்றபடி அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா மற்றும் சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன் ஜெயக்குமார் ஆகியோர் சிவி சண்முகம் அணியில் செயல்பட்டு வந்தனர்.
இதற்கிடையே தான் நேற்று சங்கரன்கோவில் எம்எல்ஏ அணி தாவினார். சிவி சண்முகம் அணியில் இருந்து அவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு வழங்கினார். அதேவேளையில் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கினார். இசக்கி சுப்பையா விரைவில் முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது இசக்கி சுப்பையா ராஜினாமா செய்ததால் இதன்மூலம் மதுரை உள்பட 10 தென்மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் வெறும் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே அதிமுகவிற்கு உள்ளனர். ஒன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் எம்எல்ஏ டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், இன்னொருவர் கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆவார்.












Click it and Unblock the Notifications