செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் முழுவதும் கூட்டணி தாவுதல், உட்கட்சி மோதல்கள் மற்றும் எம்எலஏ ராஜினாமா என மிகவும் பரபரபாகவே நகர்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்த பிறகு நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகள், தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன. அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருப்பது தற்போது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில் இது விஜய்யின் திட்டம் தான் எனவும், பின்னணியில் செங்கோட்டையன் தான் உள்ளார் என்கின்றனர் தவெகவினர்.
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்ட முடியாததால், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆரம்பத்தில் இந்த கூட்டணி அரசே 5 ஆண்டுகள் நீடிக்குமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் இருந்தது. காரணம், கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தங்களது அரசியல் அடையாளத்தை தக்க வைக்கவும், எதிர்கால வளர்ச்சியையும் கணக்கில் வைத்து செயல்படுகின்றன.
அதிமுக பிளவு
இதனால், கூட்டணி ஆதரவை மட்டுமே நம்பி இருக்காமல், சட்டப்பேரவையில் தங்களது பலத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் தவெகவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அ.தி.மு.க.வில் தேர்தல் தோல்விக்கு பிறகு பெரிய உட்கட்சி மோதல் உருவானது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட தொடங்கினர். அதன் உச்சமாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தூய அரசியல்
அந்த நேரத்தில், இவர்களில் சிலருக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டம் மற்றும் "தூய அரசியல்" என்ற இமேஜுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணங்களால், தவெக அந்த முடிவை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேலுமணி தரப்பில் அதிருப்தி அதிகரித்தது.
இந்த சூழலில்தான், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதுவே தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
குதிரைப் பேர அரசியல்
எதிர்க்கட்சிகள் இதை "குதிரைப் பேர அரசியல்" என்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. திமுக தலைவர் முக ஸ்டாலின், "பெரும்பான்மை இல்லாத நிலையில் மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் அரசியல் நடக்கிறது" என்று விமர்சித்துள்ளார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி, "கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு என்ற கீழ்த்தரமான அரசியலை தவெக அறிமுகப்படுத்தியுள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
எம்.பி. ஜோதிமணி
இந்த விவகாரத்தில் ஆச்சரியமாக, கூட்டணிக் கட்சிகளும் அதிருப்தி தெரிவிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "குதிரைப் பேர அரசியலை எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது" என்று கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், தவெக தரப்பு இதை முற்றிலும் மறுக்கிறது. "மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி அரசியலை நம்பி, சுய விருப்பத்தின் பேரில்தான் அவர்கள் கட்சியில் இணைகிறார்கள்" என்கிறது.
பெரும்பான்மை
அரசியல் ரீதியாக பார்த்தால், இந்த நகர்வுகளுக்குப் பின்னால் ஒரு நீண்டகால திட்டம் இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தற்போது சட்டப்பேரவையில் தவெகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர். 5 தொகுதிகள் காலியாக உள்ளதால் பெரும்பான்மைக்கான எண் குறைந்துள்ளது. வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றால், அவர்களின் பலம் மேலும் உயரும். அதே நேரத்தில், ஏற்கனவே அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி காமராஜ் போன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தவெகவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
செங்கோட்டையன்
இந்த சூழலில், இன்னும் சில எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தவெகவை நோக்கி நகர்ந்தால், கூட்டணி ஆதரவு இல்லாமலேயே தனிப்பெரும்பான்மை அரசாக மாறலாம் என்ற கணக்கில்தான் விஜய் தரப்பு செயல்படுகிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததே செங்கோட்டையன் தான் என்கின்றனர். ஒரு வகையில் இது பாஜகவின் பழைய திட்டம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் அரசியல்
ஆனால், இந்த அணுகுமுறை கூட்டணிக் கட்சிகளுக்குள் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. "இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்... நாளை நம்ம கட்சியிலிருந்தும் யாரையாவது இழுத்தால்?" என்ற அச்சம் சில கூட்டணி கட்சிகளில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விஜய்யின் தற்போதைய அரசியல் நகர்வு வெறும் நம்பர் பாலிடிக்ஸா? அல்லது தமிழக அரசியலில் தவெகவின் நீண்டகால ஆதிக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக எதற்கும் அஞ்சாத 'குதிரை பேர அரசியலா?' என்ற கேள்வி எழாமல் இல்லை.












Click it and Unblock the Notifications