ஏப்ரல் மாத தங்கம் இறக்குமதி கடும் சரிவு - காரணம் என்ன?
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் தங்கம் இறக்குமதி செய்வது சுமார் 34 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததுள்ளது.
Recommended Video
மும்பை: கோடை காலத்தின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் தேவை குறைந்ததாலும், சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதாலும், தங்கம் இறக்குமதி செய்வது குறைந்துள்ளது என்று தங்கம் மற்றும் கனிம சேவைகள் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்துவருகிறது. இந்தியர்கள் தங்கத்தை புனிதமான பொருளாக மதிப்பதுடன், வருங்காலத்திற்கு ஏற்ற நல்ல முதலீடாகவும் மக்கள் கருதுகின்றனர்.
இதனால்தான், இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே தேவை அதிகமாக உள்ளது. அதுவும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும்.
தங்கம் நகை விற்பனை
தங்கம் வாங்குவதற்கு ஏற்ற நாளாகக் கருதப்படும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதற்கு நாட்டின் அனைத்து நகைக்கடைகளிலும் கூட்டம் அலைமோதும். பணக்காரர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் தங்க நகைகள் மட்டுமல்லாது, ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று விரும்புவதால் அட்சய திருதியை நாளில் மட்டும் தங்க நகை விற்பனை களை கட்டும். இதெல்லாம் கடந்த ஆண்டு வரையில் தான்.
நகை விற்பனை மந்தநிலை
ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பின்னர் வரும் முதல் அட்சய திருதியை என்பதால், அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை எப்படி இருக்குமோ என்று தங்க நகை விற்பனையாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அட்சய திருதியை நாளன்று தங்க நகை விற்பனை மந்தமாகவே இருந்தது.
விலை உயர்ந்த தங்கம்
அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை மந்தமாக இருந்ததற்கு காரணம் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டதுதான், கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 2800 ரூபாயாக இருந்து. நடப்பு ஆண்டில் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 3200 ரூபாயாக உயர்ந்து விட்டது.
நகை வாங்க ஆர்வம் குறைவு
அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை மந்தமாக இருந்ததற்கு மற்றொரு காரணம் தங்க நாணயம் விற்பனை செய்வதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துவிட்டதால், நடுத்தர மக்கள் தங்க நகை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
வர்த்தக பற்றாக்குறை
கடந்த டிசம்பர் மாதம் முதல் சர்வதேச சந்தையில் தங்கம் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது தங்கத்தின் விலை 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவும் தங்கத்தை இறக்குமதி செய்வது குறைந்ததற்கு காரணமாகும். தங்கத்தை இறக்குமதி செய்வது குறைந்தது ஒரு பக்கம் கவலை தரும் விஷயமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் சந்தோசம் தருவதாக உள்ளது. காரணம், தெற்கு ஆசியாவில் நிலவிய வர்த்தக பற்றாக்குறையை குறைத்து சமன் செய்வதற்கு உதவியது என்று சொல்லலாம்.
விற்பனை சரிய காரணம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், சிறிய அளவில் தங்கத்தை வாங்கி விற்பனை செய்து வருபவர்கள், தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பதை தற்போதுக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கத்தில் விற்பனை சரியக் காரணமாகும். கூடவே, தங்கம் இறக்குமதி செய்வது குறையக் காரணம் என்று தங்கம் மற்றும் கனிமவள சேவைகள் (GFMS) ஆலோசனை நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் சுதீஷ் நம்பியாத் தெரிவித்தார்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
உள்நாட்டில் தங்கத்தின் விலையானது ஏப்ரல் மாதத்தில் 21 மாத உச்ச விலையில் விற்பனையானது. கூடவே, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் ஏப்ரல் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவும் சில்லறை நகைக் கடை உரிமையாளர்கள் தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பதை குறைத்துள்ளனர். இதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கத்தை இறக்குமதி செய்வது குறைய காரணம் என்று எபான் ஜூவல் நிறுவனத்தின் உரிமையாளர் அபிஷேக் பன்சால் தெரிவித்தார்.
தங்கம் இறக்குமதி 34% சரிவு
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 93.6 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், அதே சமயத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் தங்கம் இறக்குமதி செய்வது சுமார் 34 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததுள்ளது கவலைக்குறிய விசயமாகும். கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 0.66 சதவீதம் சரிவடைந்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் நகைத்துறை சார்ந்த ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்றுமதி 1.12 சதவீதம் சரிந்திருந்தது.