இனி தங்கம் விலை கொஞ்சமாவது குறையுமா? "வாய்ப்பே இல்லை.." அடித்து சொல்லும் உலக தங்க கவுன்சில் சிஇஓ
மும்பை: தங்கம் விலை என்பது கடந்த சில காலமாக அதிகரித்தே வந்துள்ளது. இப்போது மட்டும் சில காலம் பெரியளவில் உயர்வைச் சந்திக்காமல் இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பது குறித்து உலக தங்க கவுன்சிலின் சிஇஓ டேவிட் டெய்ட் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தங்கச் சந்தையில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதையும் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமலேயே உள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களில் 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.30 மட்டும் அதிகரித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதில் மக்களிடையே குழப்பம் நிலவுகிறது.

அதாவது கடந்த காலங்களைப் போலத் தங்கம் விலை பாய்ச்சலை நிகழ்த்துமா.. இல்லை இனி மேல் மெல்லச் சரியத் தொடங்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. இன்னும் தங்கம் விலை குறையலாம் என்ற ஆசையால் சிலர் தங்கம் வாங்குவதையே கூட தள்ளிப்போட்டு வருகிறார்கள்.
உலக தங்க கவுன்சில்
இதற்கிடையே பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான மனி கண்ட்ரோல் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உலக தங்க கவுன்சிலின் சிஇஓ டேவிட் டெய்ட் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், "உங்கள் போர்ட்ஃபோலியோவில் நிச்சயம் வைத்திருக்க வேண்டிய சொத்தாகவே தங்கம் இருக்கிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் கூட இதுபோல கருதுவதால் தான் அவர்கள் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
தங்கம் விலை உயரவே செய்யும்
சர்வதேச நாடுகளின் மொத்த நீண்டகால கடன் இப்போது சுமார் $76 டிரில்லியனாக உள்ளது. இது வரும் நாட்களில் மேலும் $13 டிரில்லியன் அதிகரிக்கும். வரி மற்றும் பணவீக்கம் இருக்கும் போது அது வட்டி விகிதத்தை அதிகரிக்கவே செய்யும். இதனால் கடன் வாங்கியவர்களுக்கு அதைத் திரும்பச் செலுத்துவது கடினமான ஒன்றாக மாறும். இதுபோன்ற நேரங்களில் தங்கம் தான் முக்கியமானதாக இருக்கும். இதனால் வரும் காலங்களில் தங்கம் விலை உயரவே செய்யும்.
மகத்தான வாய்ப்பு
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு மகத்தான வாய்ப்பு இருக்கிறது. இங்கு தான் தங்க இடிஎப்களுக்கு சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது. இங்குள்ள பல முதலீட்டாளர்கள் வரும் நாட்களில் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகம். ஜப்பானைப் பொறுத்தவரை இப்போது அங்குள்ள மூத்த தலைமுறையினர் இளைய தலைமுறையினருக்குச் செல்வத்தைத் தருகிறார்கள். அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு முதலீடு குறித்துப் பல விஷயங்கள் தெரிந்து இருக்கிறது. அவர்கள் தங்க இடிஎஃப்களில் அதிகம் வாங்க வாய்ப்பு இருக்கிறது.
சீனாவைப் பொறுத்தவரை அங்குள்ள காப்பீட்டு நிறுவனங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய இப்போது தான் அனுமதி கிடைத்துள்ளது. சீனா காப்பீட்டு நிறுவனம் என்பது $4.8 டிரில்லியன் சந்தை. அவர்கள் 5 முதல் 15% வரை தங்கத்தில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புள்ளது. அது தங்க இடிஎஃப்களின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும்.
இந்தியா
இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு இரண்டு வழிகளில் தங்க முதலீடு அதிகரிக்கிறது. முதலில் இங்குள்ள இளைய தலைமுறையினர் தங்கத்தில் தங்கள் முதலீட்டை அதிகரிக்கிறார்கள். இது தங்கத்திற்கான தேவை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழல் காரணமாக மத்திய வங்கியும் தங்கத்தில் முதலீடு செய்கிறது. அது வரும் காலங்களில் அதிகரிக்கவே செய்யும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications