கோவை மக்களுக்கு குட்நியூஸ்.. மேட்டுப்பாளையம் வரையில் ரயில் சேவை விரிவாக்கம்!
கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தெற்கு ரயில்வே கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. தினமும் பயணம் செய்யும் அலுவலக ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான மெமு (MEMU) ரயில் சேவை விரிவாக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் துடியலூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. மேட்டுப்பாளையம் - கோவை இடையே இயக்கப்படும் MEMU ரயில் விரைவில் 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதியளித்துள்ளார்.

தற்போது இந்த MEMU ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படுவதால், பயணிகள் கடுமையான நெரிசலுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம், கல்லூரி செல்லும் மக்கள் அதிக அளவில் பயணம் செய்வதால், பெட்டிகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நெரிசலை குறைக்க 12 பெட்டிகளுடன் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்தபோது, இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பாலக்காடு ரயில் கோட்டம் விரைவில் 4 கூடுதல் பெட்டிகளை இணைத்து, ரயிலை 12 பெட்டிகளாக இயக்கும் என்று உறுதியளித்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே அறிவிப்பு வெளியானாலும், அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போது பொது மேலாளர் நேரடியாக உறுதி அளித்துள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கோவைக்கு வரும் பலர், சாலை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரயிலை விரும்பி பயணம் செய்கின்றனர். ரயில் பயணம் மலிவானது மற்றும் நம்பகமானது என்பதால், பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த 12 பெட்டி MEMU ரயில் இயக்கம் தொடங்கினால், தினசரி பயணிகளுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும். அடுத்த சில வாரங்களில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications