வாஷ்அவுட் ஷாக்கில் என்டிஏ.. வரிசையாக கழன்றுகொள்ளும் கட்சிகள்.. ஜான் பாண்டியனின் மூவ்.. பின்னணி என்ன?
சென்னை: பாஜக பெரிய ஷாக்கில் உள்ளதாக தெரிகிறது.. காரணம், நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் எதிர்பார்க்காத அளவுக்கு தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த கூட்டணியே ஆட்டம் காண துவங்கி உள்ளது. இப்படியொரு மோசமான தேர்தல் தோல்விக்குத் தலைமை தாங்கிய பாஜக மீது கூட்டணிக் கட்சிகள் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், இப்போது கூட்டணியில் இருந்து முக்கியக் கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகிறது. இதுதான் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது...!!
தேர்தலில் கூட்டணியில் இருந்த பெரிய கட்சிகளான பாஜக, அமமுக ஆகிய 2 கட்சிகள் மட்டுமே தலா ஒரு தொகுதியில் கஷ்டப்பட்டு வெற்றி பெற்றன. மற்றபடி கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிறிய கட்சிகள் அனைத்தும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்து முற்றிலும் வாஷ்அவுட் ஆகின.

இதையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தங்களது கட்சி கடுமையான மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சொல்லி,கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஜிகே வாசன் அதிரடி
வாசனின் இந்த முடிவு அரசியல் களத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.. கடந்த தேர்தலில் பாஜகவின் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிட்டு தமாகா அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியதே இந்த விலகலுக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகிறார்கள்.
ஜி.கே.வாசன் விலகியதுமே இப்போது கூட்டணியின் இன்னொரு முக்கிய அங்கமான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் தமமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து தங்களது கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாஜக கூட்டணி உடைகிறது?
கடந்த தேர்தலில் தமமுகவுக்கு ராஜபாளையம் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு தொகுதியிலும் கட்சி தோல்வியைத் தழுவியது. இதுகுறித்து மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ள ஜான் பாண்டியன், கடந்த தேர்தலில் தங்களுக்கு வெறும் ஒரே ஒரு சீட்டைக் கொடுத்துவிட்டு, பாஜக தலைமையிடம் கெஞ்சுவதை போன்ற ஒரு நிலையை அவர்கள் உருவாக்கினார்கள், தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல் சீட்டுகளைக் குறைக்க நினைத்தார்கள். அதைத்தான் இப்போது கூட்டணி அனுபவித்து வருகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
கூட்டணியை முறித்து விலகியது சம்பந்தமாக ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கூட்டணியில் இருந்து தாங்கள் முற்றிலும் விலகினாலும், கூட்டணித் தலைவர்களுடனான தனிப்பட்ட நட்பு எப்போதும் போலத் தொடரும். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளோம், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது புதிய கூட்டணியை அமைப்பதா என்பது குறித்து அந்தந்த காலகட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றெல்லாம் தெளிவுபடுத்தி உள்ளார்.
ஜான் பாண்டியன் விஜய் குறித்து பேச்சு
கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்த ஜான் பாண்டியன், "தமிழகத்தில் மக்கள் பெரியதொரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துதான் விஜய்க்கு ஓட்டளித்து முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தனர், மக்களின் அந்த எதிர்பார்ப்பை இந்த அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும், ஆனால் தற்போதைய சூழலில், முக்கியமான மக்கள் பிரச்சினைகளில் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மவுனம் காப்பது வருத்தமளிக்கிறது.
அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.. இந்த அரசியல்வாதிகள் அனைவரும் கொள்ளைக்காரர்கள். இத்தகைய நபர்களைத் தனது கட்சியில் சேர்த்துக் கொள்வதால் தவெகவுக்கு எதிர்காலத்தில் அழிவுதான் ஏற்படும்..
எனவே, தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த அத்தகைய நபர்களை அடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக் கூடாது" என்றும் கருத்து கூறியிருக்கிறார்.
பாஜகவுக்கு பின்னடைவு?
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணிகள் உருவாவதற்கு ஜான் பாண்டியனின் இந்த முடிவு ஒரு முக்கியத் திருப்பமாக இருக்கும் என்றாலும், தமாகா, தமமுக என அடுத்தடுத்து சிறிய கட்சிகள் வெளியேறுவதால் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி பலம் பலவீனமடைந்து வருவதாகவே தெரிகிறது..
இது பாஜகவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருவதால்,கட்சியின் வாக்கு வங்கியைத் தனித்து உயர்த்தி காட்டுவதிலேயே பாஜக தலைமை இனி கவனம் செலுத்தக்கூடும் என தெரிகிறது. அதேசமயம் திராவிடக் கட்சிகளுக்கும் தவெகவுக்கும் மாற்று தாங்கள் தான் என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க, இனிவரும் காலங்களில் பாஜக இன்னும் தீவிரமாக களப்பணியாற்ற திட்டமிடும் என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications