தங்கத்தில் நடக்கும் எதிர்பார்க்காத மாற்றம்! இனி அடுத்த 2 மாதம் "இப்படி" தான் இருக்கும்! முக்கிய தகவல்
டெல்லி: கடந்த 1.5 மாதங்களாகவே தங்கம் விலை நிதானமாக நின்றது. பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்தது. இருப்பினும், இப்போது சில நாட்களாகத் தங்கம் விலை மொத்தமாக மாறிவிட்டது. குறுகிய காலத்தில் மிகப் பெரியளவில் உயர ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை இப்போது திடீரென உச்சம் தொட என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. வேறு எந்தவொரு முதலீடும் தராத லாபத்தை இந்தாண்டு தங்கம் அள்ளி கொடுத்தது. இந்தாண்டு மட்டும் தங்கம் விலை சுமார் 70% வரை உயர்ந்துள்ளது. நிற்காமல் தொடர்ந்து தங்கம் விலை ஏறி வந்த நிலையில், அக்டோபர் மாதம் இறுதியில் தங்கம் விலை சட்டென நின்றது.

தங்கம் விலை
அதன் பிறகு 1.5 மாதங்கள் தங்கம் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. இரண்டு நாட்கள் ஏறினால் இரண்டு நாட்கள் சரிவு என்றே மாறி மாறி இருந்தது. இந்தச் சூழலில் தான் தங்கம் விலை இப்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய தினம் கூட தங்கம் விலை ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 12480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதித் தங்கத்தை நோக்கி நகர ஆரம்பித்ததே இதற்கு முக்கிய காரணம். மேலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, டாலரின் மதிப்பு சரிவும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் $4,400 டாலர் வரை சென்று சாதனை படைத்தது.
அமெரிக்க வட்டி விகிதம்
மேலும், அமெரிக்க பெடரல் வங்கி கடந்த வாரம் 0.25% வட்டியைக் குறைத்தது. இதனால் வரும் காலங்களில் மேலும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே அதிகரித்தது. எப்போதுமே அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை உயரும். இப்போதும் அந்த எதிர்பார்ப்பிலேயே தங்கம் விலை உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு சரிந்ததும், தங்கம் விலை உயர இன்னொரு காரணமாக இருக்கிறது.
புவிசார் காரணங்கள்
எப்போதும் நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடாகத் தங்கமே கருதப்படுகிறது. இந்தாண்டு புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக பதற்றங்கள் காரணமாகத் தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள பெடரல் வங்கிகள் தங்கத்தை முன்பு எப்போதும் இல்லாத வகையில் வாங்கி வருகின்றன. இதற்கும் கூட ஒரு வகையில் அமெரிக்கா தான் காரணம்.
அமெரிக்கா காரணம்
அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்க டாலரை தான் ரிசர்வ் கரன்சியாக உலக நாடுகள் வாங்கி வைக்கும். ரஷ்யா உக்ரைன் மோதல் வெடித்தபோது ரஷ்யா வசம் இருந்த டாலரை அப்போதைய அமெரிக்க அதிபர் பைடன் முடக்கினார். இதனால் டாலர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்தே ரஷ்யா தங்கத்தை வாங்க ஆரம்பித்தது.
மேலும், இன்று ரஷ்யாவுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை நமக்கும் ஏற்படுமோ.. நமது டாலரையும் அமெரிக்கா முடக்கினால் என்ன செய்வது என்ற அச்சத்திலும் சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் தங்க மார்கெட்டில் இறங்கின. இதுவே தங்கம் விலை உச்சம் தொட முக்கிய காரணமாகும். இதுபோன்ற காரணங்களாலேயே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அடுத்தாண்டு தொடக்கத்தில் தான் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம் நடைபெறுகிறது. அதில் தான் வட்டி விகிதம் குறைக்கப்படுகிறதா இல்லை.. அப்படித் தொடருமா என்ற முடிவை பெடரல் வங்கி அறிவிக்கும். அதன் பிறகே தங்கம் விலையில் மாற்றம் இருக்கும்.












Click it and Unblock the Notifications