நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு கிரீன்பீஸ் அமைப்பு அச்சுறுத்தலாக உள்ளது: 'ஐ.பி' வார்னிங்
டெல்லி: நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு கிரீன்பீஸ் அமைப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று பிரதமர் அலுவலகத்துக்கு உளவுத்துறையான 'ஐ.பி' அமைப்பு அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால் இதை கிரீன்பீஸ் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.
அண்மையில் நாட்டில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பி இருந்தது. அதில் கிரீன்பீஸ் போன்ற அமைப்புகள் நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மேலும் உண்மைக்கு மாறான தகவல்களை முன்வைத்து கிரீன்பீஸ் அமைப்பினர் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கிரீன்பீஸ் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் பிரதாப் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
தாங்கள் வெளிநாட்டில் இருந்து எந்த ஒரு நிதியும் பெறவில்லை என்றும் 2013-14ஆம் ஆண்டு இந்தியாவில்தான் ரூ20 கோடி நன்கொடையை நாங்கள் திரட்டியிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
மத்திய அரசு தொழில்திட்டங்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களைப் பற்றியோ சுற்றுச் சூழலைப் பற்றியோ அக்கறை கொள்ளாமல் செயல்படுகிறது. அதையே நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications