ஜிஎஸ்டி வரி அறிமுக ஆண்டிலேயே அமர்க்களம் - ரூ. 7.19 லட்சம் கோடி வசூல்
சென்ற 2017-18 நிதியாண்டில் மத்திய அரசு ஜிஎஸ்டியின் கீழ் மொத்தம் ரூ.7.19 லட்சம் கோடி வசூல் செய்துள்ளது.
சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரையிலும் மாதாந்திர சராசரியாக சுமார் 89,885 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.
வாட் வரி விதிப்பு முறையில் ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலங்களின் வசதிக்கும் வருவாய்க்கும் ஏற்ற மாதிரி வரி விகிதங்களை அமல்படுத்திக்கொண்டன. மாநிலங்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப வரி விகிதங்களை அமல்படுத்திக் கொண்டதால் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறி, அவை மக்களின் தலையில் சுமையாக இறங்கியது. இதனால் பணவீக்க விகிதமும் ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்தது.

பல முனை வரிமுறைகளை ஒழித்துவிட்டு அதற்கு மாற்றாக ஒரே தேசம் ஒரே வரி முறை (One Nation, One Tax) என்ற முழுக்கத்துடன் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி வரி முறையில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு விதமான வரி விகிதங்கள் அமல்படுத்தன. அதைத் தொடர்ந்த மாதங்களில் வரி வசூல் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. முதல் மாதத்திலேயே 95,000 கோடி வசூல் செய்யப்பட்டது. ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக சுமார் 90,669 கோடி ரூபாய் வசூலானதாக தெரிவித்தது.
செப்டம்பர் மாதத்தின் வரி வசூல் சுமார் 92,150 கோடி ரூபாயை எட்டியது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் வரி வசூல் அதிகரித்து வந்த நிலையில் வரி மாதம் ஜிஎஸ்டி வரி ரூ.86,318 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனிடையே 2017-18 நிதியாண்டுக்கான மொத்த வரி வசூல் விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2017 ஆகஸ்ட் முதல் 2018 மார்ச் வரையில் மொத்தம் ரூ. 7.19 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.1.19 லட்சம் கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.1.72 லட்சம் கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.3.66 லட்சம் கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு மாதங்களில் சராசரி மாதாந்திர வசூல் ரூ.89,885 கோடியாகும். 2017 ஜூலை மாத வசூல் உட்பட 2017-18-ம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வரி வசூல், தற்காலிகமாக ரூ.7.41 லட்சம் கோடியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் எட்டு மாதக் காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீடு ரூ.41,147 கோடியாகும். இது 2015-16ஆம் ஆண்டின் வரிவசூலின் அடிப்படையில் மாநிலங்களின் வருவாய் 14 சதவிகித அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications