ஜிஎஸ்டியால் சிவகாசியில் சரிந்த பட்டாசு விற்பனை- கவலையில் குட்டி ஜப்பான்
தீபாவளி என்றதும் புத்தாடைகளுக்கு அடுத்து நினைவுக்கு வருவது பட்டாசுகள். சிவகாசி பட்டாசுகள் நடப்பாண்டு ரூ. 2000 கோடி அளவிற்கு குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சிவகாசி: ஜிஎஸ்டி வரி, உச்சநீதிமன்ற தடை, சீன பட்டாசுகளின் வருகையினால் சிவகாசியில் பட்டாசு விற்பனை குறைந்து விட்டதாக கவலைப்படுகின்றனர் உற்பத்தி மற்றும் மொத்த விற்பனையாளர்கள்.
தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசு தான். குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் உற்பத்த செய்யப்படும் பட்டாசுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
அதிர வைக்கும் வெடிச்சத்தமாக இருக்கட்டும், கண்ணை கவரும் மத்தாப்புகளாகட்டும் பட்டாசு வெடிப்பதே அலாதியான சுகம். மாசு, புகை, காசை கரியாக்குவது என ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பட்டாசுகளை தீபாவளியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

சிவகாசியில் பட்டாசு விற்பனை
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு தினம் மட்டுமே உள்ளதால் பட்டாசு விற்பனை சிவகாசியில் களைகட்டியுள்ளது. என்னதால் ஆன்லைனில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டாலும் நேரில் வந்து பட்டாசுகளின் தரத்தை பார்த்து வாங்குவதையே பலரும் விரும்புகின்றனர்.

பட்டாசு விற்பனை
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது பட்டாசுத் தொழில். கடந்த ஆண்டு 4000 கோடி ரூபாய்க்கு விற்பனையான பட்டாசு இந்த ஆண்டு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட காரணங்களினால் ரூ. 2000 கோடி அளவிற்கு பட்டாசு விற்பனை குறைந்து விட்டது என்பது விற்பனையாளர்களின் கவலையாகும்.

பட்டாசு தொழிலாளர்கள்
நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்கள் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு
ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் பட்டாசுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புது புது பட்டாசு ரகங்கள்
ஆண்டுதோறும் மக்களைக் கவர, புதுப் புது பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டும் பலவகையான பட்டாசுகளுடன் சென்னையின் பல பகுதிகளில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. விற்பனையைப் பொறுத்தவரை, 40 நாட்கள் வியாபாரம் என்பது, தற்போது 3 நாட்களாக சுருங்கி விட்டதாக தெரிவிக்கிறார் பட்டாசு விற்பனையாளர்.

வட மாநில ஆர்டர்கள்
டெல்லி, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாகக் கூறி தடை விதிக்கப்பட்டதாலும், மழை, வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றத்தாலும், பட்டாசுக்கு ஜிஎஸ்டியில் 28 சதவீத வரிவிதிக்கப்பட்டதாலும் இந்த ஆண்டு வட மாநில ஆர்டர்கள் குறைந்தன. இதனால், இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விட்டது என்பது உற்பத்தியாளர்களின் கவலை.

சிவகாசி பட்டாசுகளுக்கு பாதிப்பு
சீனாவிலிருந்து ஏராளமான கன்டெய்னர்களில் கள்ளத் தனமாக சீனப்பட்டாசுகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு நெருக்கடிகள் காரணமாக சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன.

பணம் மிச்சம்
ஜிஎஸ்டி வரி உயர்வினால் வடமாநில ஆர்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி செய்த பட்டாசுகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர். எனவே 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் கிடைப்பதால் சிவகாசிக்கு பட்டாசு வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications