எங்கள் கணிப்பு தவறாகவே இருக்கட்டும்... இந்தியா வேகமாக வளரட்டும்! - ஐஎம்எப்
வாஷிங்டன்: இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த எங்கள் கணிப்பு தவறாகவே இருக்கட்டும்.. இந்தியா இன்னும் வேகமாக வளரட்டும் என என்று சர்வதேச நிதி அமைப்பு ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் ஐஎம்எப் வெளியிட்ட முன்கணிப்பு அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு வெறும் 3.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என்று கூறியிருந்தது.

இதனை இந்திய அரசும், திட்டக் கமிஷனும் நிராகரித்ததுடன், 5 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி இருக்கும் என கூறின.
இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரமும் அமெரிக்க நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் 5.5 சதவீத வளர்ச்சி நிச்சம் என்றார்.
இந்த நிலையில் ஐஎம்எப்பின் ஆசியா பசிபிக் துறை இயக்குநர் அனூப் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் எந்த அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் 3.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என கணித்தது ஐஎம்எப் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அனூப் சிங், "ஐஎம்எப் கணிப்பிலும் இந்தியாவின் விளக்கத்திலும் பெரிய மாறுபாடில்லை. சில காலாண்டுகளில் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளைப் பொருத்து இந்த வளர்ச்சி அமையும்.
இந்த மாதிரி கணிப்புகளின் போது சில மாறுபாடுகள் இருப்பது சகஜம். குறித்த காலகட்டத்தில் பண ஓட்டம் கட்டுப்படுத்தப்படும்.. வெளி சக்திகளின் பாதிப்புகள் இருக்கலாம். இதையெல்லாம் இந்தியா எந்த அளவு வேகமாக எதிர்கொள்கிறது என்பதுதான் விஷயமே.
இன்னும் சில காலாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் தனது பழைய நிலைக்குத் திரும்பும் என ஐஎம்எப் நம்புகிறது. அப்போது 4.5 அல்லது 5 சதவீத வரை அதன் வளர்ச்சி இருக்கும். எங்கள் கணிப்பு தவறாகவே இருக்கட்டும். இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்தால் மகிழ்ச்சியே," என்றார்.












Click it and Unblock the Notifications