அமெரிக்காவின் சுண்டல், ஸ்டீல் உள்ளிட்ட 29 இறக்குமதி பொருட்களுக்கு சுங்கவரி அதிகரிப்பு
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு இந்தியாவில் சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான சுங்க வரியை அமெரிக்க அரசு சமீபத்தில் உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது. இதனால் உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் பொருட்களுக்கு அதிகப்படியான இறக்குமதிக்கான சுங்கவரியை விதித்திருந்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏனெனில் இந்தியாவில் இருந்து வருடத்துக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஸ்டீல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரியை அதிகரித்து நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் போன்ற பொருட்களுக்கு 60 சதவீதமும், பயறு வகைகளுக்கு 30 சதவீதமும், போரிக் ஆசிட் மீதான வரி 7.5 சதவீதமும், அர்திமீயா எனப்படும் இறால் மீன் வகைகள் மீதான வரி 15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரும்பு, எஃகு பொருட்கள், ஆப்பிள்கள், முத்துகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அலாய் ஸ்டீல், ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல், பருப்பு வகைகள், இரும்பு, ஆப்பிள், முத்துக்கள் போன்ற இதர பொருட்கள் மீதான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கரவாகனங்கள் மீதான இறக்குமதி வரி மீது எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications