உச்சத்தை தொட்ட பெட்ரோல்,டீசல் விலை - ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர தயங்குவது ஏன்?
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. லிட்டருக்கு 80 ரூபாயை தாண்டி சென்றுள்ளதால் விற்பனையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படவேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை: கர்நாடகா சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. நாடு முழுவதும் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலை தமிழகத்தில் 80 ரூபாய்க்கு மேல் தாண்டியுள்ளது. செவ்வாய்கிழமை பெட்ரோலின் விலை லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து ரூ.80.11 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ. 72.14 ஆகவும் விற்பனையாகிறது.
2013க்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே வருவதால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அதன் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. பெட்ரோல், டீசலையும், ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து, அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்த விலை உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்கிறோம். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தியைக் குறைத்ததாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வினாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது, எண்ணெய் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை
குறைத்துவிட்டதால் தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. நிதியமைச்சகம் மே 18ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி கட்டணம் 25 பில்லியன் டாலர் முதல் 50 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், உயர்ந்துவரும் கச்சா எண்ணெய் விலையால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் அல்லது பற்றாக்குறை அதிகரிக்கலாம். அளவுக்கு அதிகமாக எண்ணெய் விலை அதிகரித்தால் மட்டுமே அரசு இந்தப் பிரச்சினையில் தலையிடும். அதேபோல, வரிச்சலுகைகள் அளிக்கும் திட்டம் இதுவரையில் எதுவும் இல்லை. 2018-19ஆம் நிதியாண்டுக்கான பெட்ரோலிய மானியம் ரூ.25,000 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மானியத் தொகை எல்.பி.ஜி. மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய இரண்டுக்குத்தான் பொருந்தும் என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி 2014 நவம்பரில் இருந்து, 2016 ஜனவரி வரி 9 முறை உயர்த்தப்பட்டது. ஒரு முறை மட்டும் ரூ.2 குறைத்தது.
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை விலையை மாற்றி அமைக்கும் நடைமுறை, கடந்தாண்டு ஜூனில் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக சர்வதேச விலைக்கு ஏற்ப,பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இவற்றின் மீதான வரியைக் குறைக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை.
பெட்ரோல் விலை உயர்வால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். டீசல் விலை உயர்வினால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மனது வைக்க வேண்டும். வரியால் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. டீசல் மீதான மத்திய அரசின் வரி மூன்று மடங்கும், பெட்ரோல் மீதான விலை இரண்டு மடங்கும் அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டை ஒப்பிட்டால் 5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மத்திய அரசு விதிக்கும் வரி மிக அதிகம்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் அதற்கான வரியை உயர்த்தி லாபம் அடைகின்றன.பெட்ரோல், டீசலையும், ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து, அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. இது மக்களுக்கான அரசாக இருந்தால் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும். ஆனால் கார்ப்பரேட்டுகளின் அரசாக இருக்கிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர ஒப்புக்கொள்ளவில்லை. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால், மாநிலத்தின் வரி வருவாய் நலிவடைந்துவிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெட்ரோலியம் மற்றும் மது மூலம்தான் மாநிலத்துக்கு அதிக வருவாய் கிடைத்துவருகிறது. பெட்ரோலியத்தை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் தமிழகத்தின் வரி வருவாய் நலிவடையும் நிலை ஏற்படும். ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு
சென்றால் நமக்குக் கிடைக்கும் வருவாய் கூட கிடைக்காமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.