பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.15 குறைப்பு: டீசல் 50 காசு உயர்வு!
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து, அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.
இந்நிலையில், டீசல் விலையை உயர்த்துவது பற்றி கிரித் பரிக் தலைமையிலான கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வையடுத்து, அக்கமிட்டி டீசல் விலையை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 1 ருபாய் 15 காசுகள் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 46 காசுகள் குறைந்து 74 ரூபாய் 22 காசுகளுக்கு விற்கப்படும். டெல்லியில் 71.02க்கும், கொல்கத்தாவில் 78.07க்கும், மும்பையில் 78 ரூபாய் 04 காசுகளுக்கும் விற்கப்படும்.
அதே நேரத்தில், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தி அறிவித்துள்ளது எண்ணெய் நிறுவனங்கள். அதன்படி, சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் உயர்ந்து 56 ரூபாய் 61 காசுகளுக்கு விற்கப்படும். டெல்லியில் 53.10க்கும், கொல்கத்தாவில் 57.49க்கும், மும்பையில் 60 ரூபாய் 08 காசுகளுக்கும் விற்கப்படும்.