விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன?
மத்திய கிழக்கு ஆசியாவில் நீடித்து வரும் தீவிரப் போர்ச் சூழல், தற்போது இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நாணய கொள்கைக் குழுவின் (RBI MPC) ஜூன் மாதக் கூட்டம் முடிவடைந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பதம் பார்க்கும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
2026-27 நிதியாண்டில் (FY27) நாட்டின் சில்லறை பணவீக்கம் (Inflation) கணிசமாக உயரும் என்றும், அதேநேரம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான ஜிடிபி (GDP) எதிர்பார்த்ததை விடக் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.

வாட்டிவதைக்கப்போகும் விலைவாசி உயர்வு
ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா மற்றும் நாணய கொள்கை குழுவினர் வெளியிட்டுள்ள புதிய கணிப்பின்படி, வரும் 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பணவீக்கம் 5.1 சதவீதமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் (Commercial LPG), அடிப்படை உலோகங்கள் (Base Metals), பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற மிக முக்கிய மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே இந்த அதிரடி விலைவாசி உயர்வுக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் அன்றாடப் பொருட்களின் விலையும் உயரப்போவது தற்போதே உறுதியாகியுள்ளது. இதேபோல் இந்த ஆண்டு மழைபொழிவு குறைவாக இருக்கும் என்பதால் உணவு பொருட்கள் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகைக் காலங்களுக்கு ஆபத்து?
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள காலாண்டு வாரியான பணவீக்கக் கணிப்புகள், சாமானிய நடுத்தரக் குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 4.2 சதவீதமாகக் கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்பட்டாலும், அடுத்தடுத்த காலாண்டுகளில் நிலைமை மோசமாக மாறவுள்ளது.
இரண்டாவது காலாண்டில் (Q2) பணவீக்கம் 5.1 சதவீதமாக உயரும் என்றும், அதன் பிறகு வரும் மூன்றாவது (Q3) மற்றும் நான்காவது (Q4) காலாண்டுகளில் அது 5.9 சதவீதம் என்ற அபாயகரமான உச்சத்தைத் தொடும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இந்த காலாண்டுகள் தான் இந்தியாவின் மிக முக்கியப் பண்டிகைக் காலங்கள் என்பதால், அந்தச் சமயத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி சாமானியர்களால் எட்ட முடியாத அளவிற்கு உயரக்கூடும்.
6.6 சதவீதமாகக் குறையும் ஜிடிபி வளர்ச்சி
விலைவாசி ஒருபுறம் உயரப் போகிறது என்றால், மறுபுறம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி விகிதமான ஜிடிபி (Real GDP) கணிசமாகச் சரியப் போகிறது என்ற மற்றொரு கசப்பான உண்மையையும் மத்திய வங்கி உடைத்துள்ளது.
2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்பு கணித்திருந்த நிலையில், தற்போதைய சர்வதேசப் போர் நெருக்கடிகள் காரணமாக அதனை 6.6 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது.
காலாண்டு வாரியான பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.6 சதவீதம், இரண்டாவது காலாண்டில் 6.3 சதவீதம், மூன்றாவது காலாண்டில் 6.5 சதவீதம் மற்றும் நான்காவது காலாண்டில் 6.8 சதவீதம் என்ற அளவில் தான் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தற்போதைய புதிய புள்ளிவிவரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மிடில் கிளாஸ் மக்கள்
ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டைச் சமாளிக்கப் பெரிதும் திணறி வருகின்றனர். இத்தகைய சூழலில், வரும் மாதங்களில் வணிக கேஸ், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்களின் விலை உயர்வால் ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகச் சந்தையிலும் விலைவாசி தாறுமாறாக உயரப் போகிறது என்ற ரிசர்வ் வங்கியின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே மாறப் போகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications