உன் தங்கம் அவன் உரிமை.. தங்கம் அடகு வைக்க புது ரூல்ஸ்.. தப்பிக்க என்ன செய்யலாம்? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கத்தை அடகு வைக்க ஆர்பிஐ வெளியிட்டிருந்த புதிய ரூல்ஸ் குறித்துக் கடந்த சில நாட்களாகவே பெரும் விவாதமே நடந்து வந்தது. அதிலுள்ள சில விஷயங்களை ஏற்கவே முடியாது என நெட்டிசன்கள் புலம்பி வந்தனர். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
ஆத்திர அவசரத்தில் தங்கம் கையில் இருந்தால் அதை அடகு வைக்க முடியும் என்பதாலேயே மக்கள் பலரும் தங்கத்தை வாங்குகிறார்கள். இதற்கிடையே தங்கத்தை அடகு வைப்பதில் ரிசர்வ் வங்கி புதிய வரைவு விதிகளை அறிவித்துள்ளன. இவை இன்னும் அமலுக்கு வரவில்லை. வரைவு விதிகளாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் கோபம்
இருப்பினும், இந்த வரைவு விதிகளுக்கு மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாகப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "ரிசரவ் வங்கி வெளியிட்டுள்ள இந்த வரைவு ரூல்ஸில் இரண்டு, மூன்று விஷயங்கள் மட்டுமே அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
ஆனந்த் சீனிவாசன்
முதலில் தங்கத்தின் மதிப்பில் 75%க்கு மேல் லோன் தரக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார்கள். அது சரியாகவே படுகிறது. நம்மில் பலரும் கிராம் ரூ.2000- ரூ.5000 வரை இருந்த போது தான் தங்கம் வாங்கியிருப்போம். இப்போது ரூ.10000க்கு போய்விட்டது. எனவே, ரூ.7500 வரை மட்டுமே தரச் சொல்கிறார்கள் அது சரியாகவே படுகிறது. ஆனால் தங்கத்தின் மதிப்பில் 90% வரை லோன் தர வேண்டும் என்கிறார்கள். 90% வரை லோன் தந்தால்.. தங்கம் விலை ஒரு 10% சரிந்தாலே அவர்கள் தங்கத்தை விற்றுவிடுவார்கள். எனவே, இந்த 75% என்னைப் பொறுத்தவரைச் சரி!
சிக்கல்
அடுத்து தங்கத்திற்கான ஒனர்ஷிப் காட்டச் சொல்கிறார்கள். அதுதான் ரொம்ப கடினம். என்னாலேயே காட்ட முடியாது. அப்படியில்லை என்றால் declaration கேட்கிறார்கள். அது தப்பில்லை. ஆனால், டிக்லரேஷன் கொடுத்தால் வருமான வரித்துறை வருமோ எனப் பயப்படுகிறார்கள். நீங்கள் ரூ.5 லட்சம் ரூ.10 லட்சம் வாங்கினால் பிரச்சினை இல்லை.. கோடிக் கணக்கில் வாங்கினால் மட்டுமே பிரச்சினை.
இன்னொரு விதி கொண்டு வந்துள்ளனர். அதாவது லோன் வாங்கச் செல்லும்போது வங்கிகள் அதை செக் செய்து ப்யூரிட்டி சர்டிபிக்கேட் தர வேண்டும். பிறகு அதைக் கட்டி முடித்து எடுக்கும்போது, மீண்டும் செக் செய்து பார்க்கலாம். அதாவது நீங்கள் வங்கியில் 22 கேரட் தருகிறீர்கள்.. திரும்பத் தரும்போது 18 கேரட்டாக தந்தால் என்ன செய்வீர்கள்.. இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்கவே ப்யூரிட்டி சர்டிபிக்கேட்.
ஒரு கிலோ வரை மட்டுமே
18 கேரட் தங்கத்திற்குக் கடன் தர மாட்டோம் என்பதே இந்த விதி. இன்று தங்கம் விற்கும் விலையில் எத்தனை பேரால் 22 கேரட் தங்கத்தை வாங்க முடியும்? இது ரொம்ப தவறு.. மக்கள் தங்கத்தை வாங்கக்கூடாது என்று சொல்வதே இந்த விதி. ஆனாலும், மக்கள் கஷ்டப்பட்டாவது தங்கத்தை வாங்கவே போகிறார்கள். அதேபோல அதிகபட்சம் ஒரு கிலோ தங்கம் வரை மட்டுமே கடன் தருவோம் எனச் சொல்லியுள்ளனர். வெகு சிலரிடம் மட்டுமே ஒரு கிலோவுக்கு மேல் தங்கம் இருக்கும். அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
உன் தங்கம் அவன் உரிமை
அதேபோல ஏலம் விடும் நடைமுறையையும் அதில் தெளிவாகக் குறிப்பிடச் சொல்லியுள்ளனர். நல்லதுதான். ஆனால், கடன் வாங்கும் அவசரத்தில் யார் அதைப் படிக்கப் போகிறார்கள். அவசர அவசரமாகக் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கவே ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கிவிட்டாலே உன் தங்கம் அவன் உரிமை ஆகவிடும். தங்கம் விலை திடீரென குறைந்தால் அந்த வித்தியாசத்தை நீங்கள் கட்ட வேண்டும். இல்லையென்றால் உங்கள் தங்கம் ஏலத்தில் போய்விடும்.
தப்பிக்க என்ன செய்யலாம்
இதில் டிக்லரேஷன் தான் பிரச்சினை. உங்கள் பெற்றோர் ஒரு கிலோ தங்கத்தைக் கொடுத்திருந்தால்.. அது எப்படி வந்தது எனக் கேட்பார்கள். அதற்குப் பதிலை ரெடியாக வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு எவ்வளவு தங்கம் கொடுக்கிறார்கள் என்பதை ஒரு ஸ்டாம்ப் பத்திரத்தில் எழுதித் தர வேண்டும். அப்போது தான் பிறகு வருமான வரி சிக்கல் எதுவும் வராது" என்றார்.












Click it and Unblock the Notifications