சோப்பு, ஷாம்பு ஜிஎஸ்டியை குறைத்தும் விலை உடனே குறையாதாமே?- காரணம் என்ன?
பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி சதவிகிதம் குறைக்கப்பட்டும் அவற்றின் விலையை உடனே குறைக்க முடியாது என்று விற்பனையாளர்கள் கூறி வருகின்றனர்.
டெல்லி: பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான நுகர்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டாலும், சில்லறை வணிகர்கள் இலாப நோக்கில் விலையை குறைக்க மறுப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும். நாட்டில் பெருவாரியான மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான பற்பசை முதல் பால் பொருட்கள் வரைக்கும் ஜிஎஸ்டி வரியானது அதிக பட்ச வரியான 28 சதவிகிதமாகவே இருந்தது.
இதனால் அப்போதே நுகர்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்தன. பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியை 28 சதவிகிதத்திலிருந்து முற்றிலும் வரி விலக்கு அளிக்குமாறும், இல்லை என்றால் குறைந்த பட்ச வரியான 5 சதவிகிமாகவாவது குறைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.
ஜிஎஸ்டி 28%
மத்திய அரசும் வர்த்தகர்களின் சிரமத்தை புரிந்துகொண்டு விரைவில் ஆவண செய்வதாக நம்பிக்கை தெரிவித்தது. வர்த்தகர்களும் மத்திய அரசானது அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் என்று ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போதும் நுகர்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்த்தன. ஆனால் அவைகளின் எதிர்பார்ப்பு பொய்த்துக்கொண்டே வந்தது.
178 பொருட்கள் வரி குறைப்பு
தொழில்நிறுவனங்களும் தங்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்று உறுதியாக நம்பிவந்தனர். இதற்காகவே அடுத்து நடக்கவிருக்கம் 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெரும்பாலான நுகர்பொருட்களுக்கான வரியை 28 சதவிகத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
கடலை மிட்டாய்
18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிமாகவும் குறைக்கப்பட்டது. கடலை மிட்டாய், எள்ளுமிட்டாய், கருவாடு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரி விலக்கு அளித்து ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த வரி குறைப்பானது வரும் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது.
நுகர்வோர்கள் மகிழ்ச்சி
இந்த அறிவிப்பானது அன்றாடம் பொதுமக்கள் உபயோகிக்கும் நுகர்பொருட்களை தயாரிக்கம் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யனிலிவர்ஸ், டாபர், நெஸ்லே மற்றும் அமுல் போன்ற தொழில்நிறுவனங்களுக்கம் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர், மேலும் அமுல், நெஸ்லே மற்றும் பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பால் பொருட்களுக்கும் நுகர்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றன.
விலையை குறைக்க மறுப்பு
அதே சமயத்தில் நுகர்பொருட்களை வாங்கி விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் விலையைக் குறைக்கமுடியாது என்று அடம் பிடிக்கின்றனர். ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்படும் இழப்பீட்டை நுகர்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே ஏற்கவேண்டும் என்று கூறிவருகின்றனர். அவ்வாறு இல்லாவிட்டால். தாங்கள் ஏற்கனவே கொள்முதல் செய்த பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய குறைக்கப்பட்ட விலையில் பொருட்களை அளிக்கவேண்டும் என்று திரும்ப திரும்ப கூறிவருகின்றனர்
பேச்சுவார்த்தை
விலை குறையுமா?
இதனால், நுகர்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்துவருகின்றது. இந்த பேச்சுவார்த்தை விரைவில் சுமூகமாக முடிந்து புதிய குறைக்கப்பட்ட விலையில் பொருட்கள் நுகர்பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.