வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி
டெல்லி: வங்கி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. வங்கியும் கடன் வாங்கியவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் வழக்குகளைத் தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் ஏற்படும் சட்டரீதியான அச்சுறுத்தல்களில் இருந்து இந்தத் தீர்ப்பு சாமானியர்களுக்குப் பெரும் பாதுகாப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு தொழிலதிபர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தபோது, நீதித்துறையின் நேரத்தையும் வளங்களையும் வீணாக்க வேண்டாம் என்று நீதிமன்றம் மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.

பொதுவாக வங்கி கடன் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் சிவில் தன்மையுடைய வணிகப் பரிவர்த்தனைகள் ஆகும். கடன் வாங்கியவர் வங்கியுடன் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டி கணக்கை முடித்துவிட்டால், அந்தப் பிரச்சனை அங்கேயே முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்னும் வழக்கை நீட்டிப்பது அவசியமற்றது.
இந்த குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் 6.49 கோடி ரூபாய் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 4.25 கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளார். வங்கியுடன் முறையான ஒப்பந்தம் செய்யப்பட்டு கணக்கு முடிக்கப்பட்ட பிறகு, அவர் மீது கிரிமினல் வழக்கை நடத்துவது மிகப்பெரிய அநீதி என்று நீதிமன்றம் கருதுகிறது.
குற்றம் நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும்போது வழக்கை தொடர்ந்து இழுத்தடிப்பது ஒருவருக்குத் தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தும். வணிகப் பரிவர்த்தனைகளில் மோசடி செய்யும் நோக்கம் இல்லாதவரை, அதனை கிரிமினல் குற்றமாகப் பார்க்கத் தேவையில்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் கடன் வாங்கியவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
இந்த தீர்ப்பு மூலம் வங்கி கடனை நேர்மையாக அடைக்க நினைப்பவர்களுக்கு இருந்த மிகப்பெரிய சட்டச் சிக்கல் நீங்கியுள்ளது. கடன் தொகையை ஒருமுறை செட்டில்மென்ட் செய்த பிறகு, நீதிமன்ற வாசலில் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இனி யாருக்கும் ஏற்படாது.
கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் ஏற்படும் சட்டரீதியான அச்சுறுத்தல்களில் இருந்து இந்தத் தீர்ப்பு சாமானியர்களுக்குப் பெரும் பாதுகாப்பினை வழங்கும். இதன் மூலம் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவு மேம்படும். தொழில் முனைவோர் மீண்டும் பயமின்றித் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த இந்தத் தீர்வு உதவும். வணிக ரீதியான பணத் தகராறுகள் சமரசமாக முடிந்த பின், அவர்கள் மீது தேவையற்ற 'குற்றவியல்' நடவடிக்கை தொடராது என்பதால், அவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படும் அபாயம் நீங்குகிறது.
குற்றம் நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் சூழலில், தேவையற்ற வழக்குகள் இல்லாததால் தொழிலதிபர்கள் மீண்டும் தங்களது வணிகத்தில் கவனம் செலுத்த முடியும். கடன் வசூல் தீர்ப்பாயம் ) அல்லது வங்கிகளுடன் 'ஒரே முறை கடன் தீர்வு' மூலம் தொகையைச் செலுத்தி விவகாரத்தை முடித்துக் கொண்டால், அதுவே இறுதியானதாக மாறும். வணிக மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் என்பது பெரும்பாலும் 'சிவில்' தன்மை கொண்டவை. அவை சமரசம் மூலம் முடிந்த பிறகு, அவற்றைக் 'குற்றவியல்' வழக்காகத் தொடரக் கூடாது என்ற தெளிவான நடைமுறை மாற்றம் ஏற்படும். வங்கிக் கடனை ஏமாற்றாமல், தங்களால் இயன்ற தொகையைச் செலுத்தி வங்கியோடு சுமுகமாக முடித்துக் கொள்பவர்களை, சட்டத்தின் பெயரால் மேலும் அச்சுறுத்தக் கூடாது என்ற ஆரோக்கியமான மாற்றத்தை இந்தத் தீர்ப்பு உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications