டாடா சன்ஸ் புதிய தலைவர் நடராஜன் சந்திரசேகரனின் பொழுது போக்கு என்ன தெரியுமா?
இயற்கை அழகை அப்படியே புகைப்படமாக எடுப்பது, மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுதான் டாடா குழுமத்தின் புதிய தலைவர் நடராஜன் சந்திரசேகரனின் பொழுது போக்கு என்று தெரியவந்துள்ளது.
மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டாடா குழும தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடராஜன் சந்திரசேகரன். நடராஜன் சந்திரசேகரன் தற்போது டிசிஎஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி தலைவராக பொறுப்பேற்பார்.
53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் நாமக்கல் அருகே மோகனுரில் 1963ல் பிறந்தார். கோவை சிஐடியில் இளங்கலை அப்ளைடு சயின்ஸ் திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் முதுகலை கம்யூட்டர் அப்ளிகேசன் படித்துள்ளார். இவரது மனைவி பெயர் லலிதா. மகன் பிரனவ். இருவரும் மும்பையில் வசிக்கின்றனர்.
டாடாவில் பணி
1987ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் சந்திரசேகரன், படிப்படியாக உயர்ந்த இவரால் டாடா நிறுவனத்தின் வர்த்தகமும் உயர்ந்தது. கடந்த 2010ஆம் நிதியாண்டில் . 30,029 கோடியாக இருந்த வருமானம் 2016ஆம் நிதியாண்டில் 1.09 லட்சம் கோடியாக உயர்ந்தது.
டிசிஎஸ் இளம் சிஇஓ
நடராஜன் சந்திரசேகரன் 2009ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது ஜஸ்ட் 46 தான். மிக இளம் வயதில் சிஇஒ பதவிக்கு வந்தார். சைரஸ் மிஸ்திரி வெளியேறிய பின்னர் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவன போர்ட்டில் இணைந்தார்.
பதவிகள்
நாஸ்காம் தலைவராக 2012 - 13ஆம் பதவி வகித்துள்ளார். 53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் தற்போது டாடா சன்ஸ் நிறுவனங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் ஒரு தமிழர் அமரப்போவது மகிழ்ச்சிகரமான விசயம்தான்.
நாராயணமூர்த்தி பாராட்டு
டாடா குழும தலைவராக பொறுப்பேற்க உள்ள நடராஜன் சந்திரசேகரனுக்கு இன்போசிஸ் நிறுவனர் நாராயாணமூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது மிகச் சரியான தேர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார். டாடா குழும நிறுவனங்கள் கொண்டாடப்பட வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மராத்தான் பந்தய வீரர்
நடராஜன் சந்திரசேகரன் சிறந்த புகைப்படக் கலைஞர், கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் கேமிராவில் புகைப்படங்களை சுடத் தொடங்கிவிடுவார். சிறந்த மராத்தான் ஓட்டப்பந்தைய வீரர். சர்வதேச அளவில் நடைபெற்ற மராத்தான் பந்தையங்களில் பங்கேற்றுள்ளார். டோக்கியோ, நியூயார்க், பெர்லின், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற மராத்தான் பந்தையங்களில் வெற்றி பெற்றுள்ளார்.