தங்கமயில் டூ டைட்டன்: தங்கம் வரி உயர்வை லெப்ட் கையில் டீல் செய்யும் நகை கடைகள்! பிரம்மாஸ்திர திட்டம்
மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில், இந்திய நகைத் தொழில் துறை ஒரு கடினமான ஆண்டை எதிர்கொள்ளும் என்று தொழில் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது நகை கடை நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மிகவும் முக்கியமான செய்தியாகும். இதேவேளையில் நகை கடைகள் மாற்று திட்டத்தையும் கையில் வைத்துள்ளது.
இந்த வரி உயர்வு தங்கத்தின் விலையை உயர்த்துவதால், நுகர்வோர்கள் நகை வாங்குவதை தள்ளிப்போடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, விலை சிறிய அளவு உயர்த்தால் கூட மக்கள் தங்க நகை வாங்குவதை நிறுத்தும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இருப்பினும், பெரிய நகை நிறுவனங்கள் தங்கள் பிராண்ட் வலிமை, சரக்கு மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக சிறிய நகைக்கடைகளை விட சற்று சிறப்பாக செயல்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் வாடிக்கையாளர்களை தொடர்ந்து நகை கடைக்கு ஈர்க்கும் பிரம்மாஸ்திர திட்டத்தையும் நகை கடைகள் வைத்துள்ளது.
நகை விற்பனை பாதிப்பு
வரி உயர்வு மூலம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், இந்தியா முழுவதும் நகை விற்பனை அளவு (volume) 10 முதல் 15 சதவீதம் வரை குறையக்கூடும். இருப்பினும், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் விற்பனையின் மொத்த மதிப்பு (value) அதிகமாகவே இருக்கும்.
மேற்கு ஆசிய போர் முடிவடைந்து, உலக எரிசக்தி சந்தை நிலைபெறும் வரை இந்த நிலை தொடரும் என்று சென்கோ கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுவங்கர் சென் எச்சரித்துள்ளார். இதேவேளையில் இந்த வரி உயர்வு நீண்டகாலம் நீடிக்கும் என்று அவர் கருதுகிறார்.
2 பிரம்மாஸ்திரம்!
தங்கம் விலை அதிகமாக இருக்கும் வேளையில் மக்கள் இத்தகைய காலக்கட்டத்தில் லேசான எடை கொண்ட அதாவது லைட் வெயிட் நகைகளை அதிகப்படியாக வாங்கும் போக்கு அதிகரிக்கும் என்று அவர் விளக்கினார். இது நகைத் தொழிலின் வருவாயை ஓரளவு பாதுகாக்கும் என்று இத்துறை வட்டாரங்கள் நம்புகின்றன.
இதேவேளையில் நகை கடைகள் தங்கம் விலை உயர்வை மக்களுக்கு சுமையாக காட்டுவதை தடுக்க 18 காரட், 14 காரட் நகைகளை அதிகளவில் சந்தைக்கு கொண்டு வருவதும், அதை பெரிய அளவில் விளம்பரம் செய்வதும், இதன் மூலம் மக்களை தொடர்ந்து நகை கடைக்கு ஈர்க்கவும் நகை கடைகள் முயற்சி செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் 18 காரட், 14 காரட் தங்கத்தில் டிசைனர் நகைகள் தற்போது சந்தையின் முக்கிய விற்பனை பொருளாக மாறக்கூடும். இதன் விலையும் குறைவாக இருக்கும் காரணத்தால் மக்கள் ஆர்வமாக வாங்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பழைய தங்கம்
மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அஹம்மது கூறுகையில், "வரி உயர்வு காரணமாக அடுத்த சில காலாண்டுகளில் நகை வாங்கும் தேவை குறையாது, ஆனால் வாங்கும் முறை மாறும்" என்று தெரிவித்தார். அதாவது மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தை மாற்றி புதிய நகை வாங்கும் போக்கு அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
ஏற்கனவே நகைகடைகளுக்கு இது மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கும் வேளையில், இந்த முறை தற்போது முக்கிய விற்பனை முறையாக மாறக்கூடும்.
இதேவேளையில் நகை கடைகள் தற்போது பழைய தங்க நகைகளை வாங்கும் போது சந்தை விலைக்கு 10 சதவீதம் குறைவாகவே வாங்குகின்றனர். நகைகடைகள் புதிய தங்கத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதை காட்டிலும் பழைய தங்கத்தை வாங்குவது மூலம் பெரும் லாபம் அடையும். மேலும் வாங்கும் போது லாப அளவுகளை குறைத்துக்கொண்டால் கூடுதலாக பழைய தங்கத்தை வாங்க முடியும் என்பது நகை கடைகளின் திட்டம்.
காயின் பார்கள்
அனைத்தையும் தாண்டி நகைகடைகள் தற்போது தங்கம், வெள்ளி காயின் மற்றும் பார்களை எப்படி அதிகளவில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவது என்பதில் தீவிரமாக ஆலோசனை செய்கிறது. தங்கத்தை முதலீடாக வாங்க திட்டமிடும் மக்கள் பெரும்பாலும் காயின் பார்களாக தான் வாங்குகின்றனர். இதனால் இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஆன்லைன் முதல் ஆப்லைன் வரையில் பல புதிய வழிகளையும், வாடிக்கையாளர்களையும் தேடி வருகிறது நகை கடைகள்.















Click it and Unblock the Notifications