இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்க போகும் முடிவு! தங்க மார்கெட்டில் பூகம்பமே காத்திருக்கு!
வாஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இன்று நிதி கொள்கை குறித்த கூட்டத்தை நடத்துகிறது. இதில் அவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். இதனால் ஒட்டுமொத்த உலக மார்கெட்டும் அமெரிக்காவின் முடிவை உற்றுக் கவனித்து வருகிறது.
உலகப் பொருளாதாரத்தின் திசையைத் தீர்மானிக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் மிக முக்கியமான நிதிக் கொள்கை கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. வழக்கமாக நடக்கும் கூட்டங்களை விட இதற்கு ஒரு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ஏனென்றால் இது பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலின் தலைமையில் நடைபெறும் கடைசி கூட்டம்.

கடைசி கூட்டம்
கடந்த எட்டு ஆண்டுகளாக அமெரிக்க பொருளாதாரத்தை வழிநடத்துவதில் பவலின் பங்கு முக்கியமானதாக இருந்தது. கொரோனா கால பொருளாதார நெருக்கடி, நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த பணவீக்கம் எனப் பல சவால்களைச் சந்தித்தவர் பவல். அவரது பதவிக்காலத்தின் இறுதியில், அமெரிக்கப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதே தற்போதைய கேள்வி. பணவீக்கம் இன்னும் அவர்களின் இலக்கான 2 சதவீதத்தை எட்டாமல் 3 சதவீதத்திலேயே பிடிவாதமாக நீடிப்பதால், வட்டி விகிதத்தைக் குறைப்பதில் இப்போதைக்கு அவசரம் காட்ட மாட்டார்கள் என்றே தெரிகிறது.
என்ன நடக்கும்!
தற்போதைய சூழலில் வட்டி விகிதங்கள் 5.25% - 5.50% என்ற அளவில் நீடிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் வட்டி குறைப்பு எதுவும் இருக்காது என்றே கருதுகிறார்கள். இந்தாண்டு இரு கூட்டங்களில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இன்றைய கூட்டத்திலும் இதே நிலைதான் தொடரும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
பொதுவாக ஒரு லாஜிக் உண்டு:
வட்டி விகிதம் குறைந்தால்: முதலீட்டாளர்கள் டாலரை விட்டுவிட்டுத் தங்கத்தை நோக்கிப் பாய்வார்கள். தங்கம் விலை உயரும்.
வட்டி விகிதம் உயர்ந்தால்: டாலர் பலமடையும், இதனால் தங்கம் விலை குறையும்.
ஆனால், தற்போது வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்பதால், பெட் முடிவு என்ன என்பது மார்கெட்டின் கேள்வியாக இல்லை. அதற்குப் பதிலாகக் கூட்டத்திற்குப் பிறகு பவுல் என்ன சொல்லப் போகிறார் என்பதிலேயே அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
முக்கியம்
இன்றைய கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்கப்போவதில்லை என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில், பவுல் சொல்லும் கருத்துகளே முக்கியம். அதாவது அமெரிக்கப் பொருளாதாரம் மிக வலுவாக இருக்கிறது என்று அவர் கருத்து தெரிவித்தால், "விரைவில் வட்டி விகிதக் குறைப்பு சாத்தியம்" என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு வரும். இதனால் டாலர் மதிப்பு சரியும் என்பதால் தங்கம் விலை உயரக்கூடும்.
அதேநேரம் பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் குறையவில்லை, பொருளாதாரம் தடுமாறுகிறது என்று எச்சரித்தால், "இப்போதைக்கு வட்டி விகிதக் குறைப்புக்கு வாய்ப்பே இல்லை" என்ற சூழல் உருவாகும். இது முதலீட்டாளர்களைத் தங்கத்திலிருந்து பின்வாங்கச் செய்யும், இதனால் தங்கம் விலை குறையக்கூடும்.
அந்த 30 நிமிடங்கள்
ஏற்கனவே இந்தியாவில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவின் முடிவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 11:30 மணிக்கு வட்டி விகிதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஆனால், அதன்பிறகு 30 நிமிடம் கழித்து, நள்ளிரவு 12:00 மணிக்கு நடக்கும் செய்தியாளர் சந்திப்புதான் மிக முக்கியமானது. அதில் பவல் பேசப்போகும் ஒவ்வொரு வார்த்தையும் உலகச் சந்தையில் புயலைக் கிளப்பலாம்.
இன்று நள்ளிரவு பெடரல் ரிசர்வ் எடுக்கப்போகும் முடிவும், கொடுக்கப்போகும் விளக்கமும்தான் நாளை காலை இந்திய நகைக்கடைகளில் தங்கம் விலைப் பலகையில் என்ன நம்பர் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்!














Click it and Unblock the Notifications