நாடு விட்டு நாடு பறக்கும் தங்கம்.. விலை உச்சத்திற்கு போக இதுவே காரணம்! இனி குறைய வாய்ப்பு இருக்கா?
சென்னை: கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. தங்கம் விலை இந்தளவுக்கு உயர மூன்று விஷயங்கள் மட்டுமே முக்கிய காரணமாக இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அவை என்ன.. தங்கம் விலையில் அவை எந்தளவுக்குத் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில காலமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளது. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ 64,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வு
அதேபோல சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,075க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கம் ரூ.185 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை குறுகிய காலத்தில் இந்தளவுக்கு உயர மூன்று காரணங்களைச் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் முன்வைக்கிறார்கள். அவை குறித்து நாம் பார்க்கலாம்.
முதல் காரணம் டிரம்ப்
முதல் முற்றும் முக்கிய காரணமே டிரம்ப் தான். அவர் அமெரிக்காவை மீண்டும் வலிமையான நாடாக மாற்றப் போகிறேன் எனச் சொல்லிக் கொண்டு இஷ்டத்துக்கு வரி மேல் வரி விதித்து வருகிறார். முதலில் கனடா, மெக்சிகோ மீது 25% வரியும், சீனா மீது கூடுதலாக 10% வரியும் விதித்தார். பிறகு அலுமினியம் உள்ளிட்ட சில உலோக இறக்குமதிக்கு வரி விதித்தார். கடைசியில் ஒரே போடாக ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது எந்த நாடு அமெரிக்கா மீது வரி எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும் என அறிவித்தார்.
இது சர்வதேச அளவிலான வர்த்தகத்தைப் பாதிப்பதாக இருக்கும். டிரம்ப் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் மற்ற நாடுகள் மேலும் வரி விதிக்கும். இதுபோல மாறி மாறி வரி விதிக்கும் போது அது சர்வதேச வர்த்தகத்தைச் சீர்குலைக்கும். இதுபோல குழப்பமான அல்லது பதற்றமான காலங்களில் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்குவார்கள். இது முதல் காரணம்.
உலக நாடுகள் தான் அடுத்த காரணம்
அடுத்து உலக நாடுகள் நேரடியாகத் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. பொதுவாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் டாலர், யூரோ மற்றும் தங்கத்தை வாங்கி வைக்கும். உதாரணமாக இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் அமெரிக்க டாலரையும் தங்கத்தையும் வாங்கி வைக்கும். பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது அதைச் சமாளிக்க இவை உதவும். கடந்த காலங்களில் உலக நாடுகள் பெரும்பாலும் டாலரை தான் வாங்கிக் குவிக்கும். சர்வதேச வர்த்தகத்திற்கு ஈஸி என்பதால் டாலரை வாங்குவார்கள்.
ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா வசம் இருக்கும் டாலருக்கு அமெரிக்கா மொத்தமாகத் தடை விதித்தது. இதனால், அமெரிக்க டாலர்கள் இருந்தும் ரஷ்யாவால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகே ரஷ்யா தனது திட்டத்தை மாற்றி அதிகப்படியாகத் தங்கத்தை வாங்க ஆரம்பித்தது. ரஷ்யா மட்டுமின்றி சீனா, துருக்கி, போலந்து உள்ளிட்ட நாடுகளும் கூட தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதுபோல உலக நாடுகள் நேரடியாக அதிகளவில் தங்கத்தை வாங்குவதும் அதன் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
பறக்கும் தங்கம்
இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது நியூயார்க்கில் எப்போதும் தங்கத்தின் ப்யூச்சர்ஸ் வர்த்தகம் தான் அதிகம் நடக்கும். ஆனால், தங்கம் பெரும்பாலும் பிரிட்டனில் உள்ள வங்கிகளில் தான் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இப்போது டிரம்பால் அமெரிக்காவில் நிச்சயமற்ற தன்மை எழுந்துள்ளதால் பிரிட்டனில் இருந்து தங்கத்தை அமெரிக்காவுக்குள் எடுத்து வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது.
அதாவது அமெரிக்க வங்கிகள் குறிப்பிட்ட சைஸில் இருக்கும் தங்கக் கட்டிகளை மட்டுமே ஏற்கும். இதனால் பிரிட்டனில் இருந்து தங்கம் சுவிட்சர்லாந்து நாட்டிற்குச் சென்று, அங்கு அது உருக்கப்பட்ட அமெரிக்காவுக்கு ஏற்றபடி சைஸ் மாற்றி அமைக்கப்படும். அதன் பிறகு அது சுவிட்சர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு எடுத்து வரப்படும். இதற்குப் பாதுகாப்பு தொடங்கிப் பல செலவுகள் உள்ளன. நாம் யோசிக்காத அளவுக்கு அதிகளவில் தங்கம் இதுபோல வரும் நிலையில், இதுவும் கூட தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.
இனி குறைய வாய்ப்பு இருக்கா
இதுபோல சர்வதேச அளவில் நிலவும் பல காரணங்களே தங்கம் விலை உச்சத்திற்குப் போகக் காரணமாகும். டிரம்ப் வரி விதிப்பதைக் குறைத்து, சர்வதேச அளவில் அமைதி திரும்பினால் மட்டுமே தங்கம் விலை ஓரளவுக்குக் குறைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்கிடையே அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால் அதற்கும் கூட வாய்ப்பில்லாமல் தங்கம் விலை அதிகரிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த கூட்டம் வரும் மார்ச் மாதம் 18,19 தேதிகளில் நடக்கும் நிலையில், தங்கம் விலையில் அதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications