உலக பணக்காரர்கள் எப்படி முதலீடு செய்கிறார்கள்? எதில் பணத்தை அள்ள முடியும்! அட இவ்வளவு வழி இருக்கா
டெல்லி: உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளில் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பது குறித்த தகவல்களை யுபிஎஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக உலக பணக்காரர்களின் எதில் முதலீடு செய்கிறார்கள் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு எந்தளவுக்கு அதிகரித்துள்ளது.. அவர்கள் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்களை யுபிஎஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு உடன் ஒப்பிடுகையில் 10 ஆண்டுகளில் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121% அதிகரித்துள்ளது. 2015ல் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு 6.3 டிரில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், இப்போது அது 14.0 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
உலக பணக்காரர்கள்: அதேபோல உலக பணக்காரர்களின் எண்ணிக்கையும் சுமார் 50% அதிகரித்துள்ளதாக யுபிஎஸ் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு, 2021இல் உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டது. ஆனால், அதன் பிறகு அது அதிகரிக்கவில்லை
கடந்த 2015 முதல் 2020 வரை பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஆண்டுக்கு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால், அதன் பிறகு பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஆண்டுக்கு ஒரு சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு சரிந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இப்படி உலகின் மற்ற பிராந்தியங்களில் வசிக்கும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஆட்டம் கண்டாலும் வட அமெரிக்காவில் இருக்கும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருவதாக யுபிஎஸ் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
அந்த துறையில் அதிகம்: துறை ரீதியாகப் பார்க்கும் போது டெக் துறையிலேயே அதிகபட்ச பணக்காரர்களை உருவாகி இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. டெக் துறையைச் சேர்ந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகம், சோஷியல் மீடியா, டிஜிட்டல் பேமெண்ட், 3டி தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் துறைகளில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம்.. உலக பணக்காரர்களின் எதில் முதலீடு செய்துள்ளனர்? இதுவும் கூட அதில் விளக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ள நிலையில், உலக கோடீஸ்வரர்களின்முதலீட்டுத் திட்டங்களும் மாற தொடங்கியுள்ளன.
எங்கே முதலீடு: பணக்காரர்களின் எப்போதும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதன்படி அடுத்த 12 மாதங்களில் உலக பணக்காரர்களில் 43% பேர் ரியல் எஸ்டேட் துறையில் தங்கள் முதலீடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதேபோல 42% கோடீஸ்வரர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் போர், மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இது சந்தையைப் பாதிக்கும் என்ற அச்சம் இருப்பதால் பாதுகாப்பான முதலீடுகள் பக்கமும் கோடீஸ்வரர்கள் கவனம் செலுத்துகிறார்கள். சுமார் 40% பணக்காரர்கள் தங்கம் உட்பட விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 31% ரொக்கமாக பணத்தை வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், 26% பேர் உள்கட்டமைப்பிலும் 35% பேர் கடன் பத்திரங்களிலும் முதலீடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இது முக்கியம்: இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சுமார் 32 சதவீதம் கோடீஸ்வரக்கள் கலை மற்றும் பழங்காலப் பொருட்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனராம். இதுபோல பழங்கால பொருட்களின் மதிப்பு வேகமாக அதிகரிக்கும் என்பதாலேயே இதில் முதலீட்டுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications