நீங்க வாங்கற தங்கம் சுத்தமான தங்கமா? அதுல ஹால்மார்க் முத்திரையிருக்கா?
இந்தியாவில் வெறும் 3 சதவிகித நகை விற்பனையாளர்கள் மட்டுமே ஹால்மார்க் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
சென்னை: தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அது தரத்தினில் குறைவதுண்டோ என்று கேட்பார்கள். இப்போது பெரும்பாலானவர்கள் தரம் குறைந்த தங்க நகைகளையே அதிக காசு கொடுத்து வாங்கிக் கொண்டு வருகின்றனர். நகைக்கடைகளில் கூட்டம் ஒருபக்கம், வாங்கும் நகைகளை பொறுமையாக பரிசோதனை செய்யாமல் வாங்கிக் கொண்டு வருவதும் ஏமாறுவதற்கு காரணமாகி விடுகிறது.
பொதுமக்கள் தங்க நகைகள் வாங்கும் போது, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே வாங்குவது, அவர்கள் வாங்கும் தங்கத்தின் சுத்தத் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும்.
தங்க நகை என்பது அணிந்து அழகு பார்ப்பதற்கு மட்டுமல்ல. அது நம்முடைய முதலீடு. நம்முடைய பணத்திற்கு சரியான பொருளைத்தான் வாங்குகிறோமா என்ற விழிப்புணர்வு முதலில் இருக்க வேண்டும்.
நாம் வாங்கும் தங்கம் கலப்படமில்லாத தங்கமா? எடை சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்த பின்னரே பில்போட அனுமதிக்க வேண்டும். எஸ்டிமேட் வாங்கி ஏமாந்து போகாதீர்கள் ஒரிஜினர் பில் வாங்கினால் மட்டுமே தங்கத்தின் தரம் குறைந்தாலும் புகார் அளிக்க முடியும்.

ஹால்மார்க் அவசியம் ஏன்?
ஹால்மார்க் முத்திரை என்பது பொதுமக்கள் வாங்கும் தங்க நகைகள் சரியான மதிப்பீடு செய்யப்பட்டவை எனவும், அதிகாரப்பூர்வமான அஸேயிங் மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் உபயோகப்படுத்திய உலோகம் தேசிய, உலகளாவிய தர நிர்ணயங்களுக்கு ஏற்ப சுத்திகரிக்கப்பட்டதையும் குறிக்கிறது.

உலக தங்க கவுன்சில்
உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் ஹால்மார்க் தரச்சான்று வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்றது. தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 3,85,000 முதல் 4,10,000 நகைக் கடைகள் இருக்கின்றனர். இதில் பெரும்பான்மையாக 70 சதவிகித நகை விற்பனையாளர்கள் முறைசாரா அமைப்பைச் சேர்ந்தவர்களாக அறியப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.

நகை விற்பனையாளர்கள்
கடந்த 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைசார் நிறுவனங்கள் தங்களது சந்தை மதிப்பை 5 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதம் வரையில் உயர்த்திக்கொண்டன.எனினும், புள்ளி விவரங்களின்படி, வெறும் 13,000 நகை விற்பனையாளர்கள் மட்டுமே முறைப்படி ஹால்மார்க் தரச்சான்று பெற்று வர்த்தகம் மேற்கொள்பவர்களாக இருக்கின்றனர். இது ஒட்டுமொத்த நகை விற்பனையாளர்களில் 3 சதவிகிதத்தைவிடக் குறைவு ஆகும்.

எடை குறைவான தங்கம்
இந்நிறுவனங்கள் முறைப்படி ஹால்மார்க் தரச்சான்று பெறவேண்டும் என்பதற்காக கடந்த 2000ஆவது ஆண்டில் பி.ஐ.எஸ். அமைப்பு 413 ஹால்மார்க்கிங் மையங்களை அமைத்து தரச்சான்று பெறுவோரை ஊக்குவித்தது. எனினும் தரச்சான்று பெறவிரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்தபாடில்லை. தமிழகத்தில் 57 ஹால்மார்க்கிங் மையங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் ஹால்மார்க் தரச்சான்று பெறாத தங்கத்தின் எடை மிகமிகக் குறைவானதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 முத்திரை அவசியம்
ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதில் பிஐஎஸ் முத்திரை, நேர்த்தித்தன்மை முத்திரை, அஸேயிங் மற்றும் ஹால்மார்க் மையத்தின் முத்திரை, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு, நகை விற்பனையாளர் முத்திரை என 5 முத்திரைகள் இருக்கும். இவை 5ம் இருந்தால்தான், அது ஹால்மார்க் செய்யப்பட்ட நகை. வாடிக்கையாளர்கள், கடைக்காரரிடம் லென்ஸ் ஐ பெற்று வாங்கி, இந்த 5 முத்திரைகளையும் சரி பார்த்த பிறகே நகையை வாங்க வேண்டும்.

காரட் மீட்டர் பரிசோதனை
நகைகளில் பிஐஎஸ் என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்க வேண்டும். எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்க வேண்டும். உதாரணமாக.
தங்கத்தின் அளவு காரட் மூலம் மதிப்பிடப்படுகிறது. 1000த்திற்கு 958 என்று இருந்தால் அது 23 காரட் தங்கம் என அர்த்தம். 916 - 22 காரட், 875 - 21 காரட் , 750 - 18 காரட் தங்கம், 708 - 17 காரட் தங்கம், 585 -14 காரட் தங்கம், 375 -9 காரட். பெரிய கடைகளில் கூட இன்றைக்கு நாம் வாங்கும் தங்கம் சுத்தமானதா? கொடுக்கும் காசிற்கு மதிப்பானதா என்பதை காரட் மீட்டர் மூலம் பரிசோதனை செய்தே வாங்க வேண்டும் என்கின்றனர் ஆலோசகர்கள்.

செலவு கம்மிதான்
ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளின் விலை மிகவும் அதிகம் என சில நகைக்கடைக்காரர்கள் சொல்வதாக மக்கள் கூறக் கேட்கிறோம். அது உண்மையே இல்லை. அஸேயிங் மையத்தில் ஒரு நகையில் ஹால்மார்க் முத்திரை பெற வெறும் 18 ரூபாய் மட்டுமே செலவு. வாடிக்கையாளர்கள் எப்போதுமே நகை வாங்கும் போது, விற்பனையாளரிடம் வெறும் எஸ்டிமேட்டை மட்டுமே வாங்காமல், முறையான பில் வாங்க வேண்டும். அப்போதுதான் வாங்கிய ஹால்மார்க் நகையில் ஏதேனும் குறை இருந்தால், ஒரிஜினல் பில்லுடன், பி.ஐ.எஸ். நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தனி தனி கட்டணம்
நகைக்கு பில் போடும்போது ஆபரணத்தில் எவ்வளவு தங்கம் இருக்கிறது, பிற உலோகங்கள் எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளன போன்றவற்றை பதிவிடவேண்டும். கல் ஒட்டுவது போன்றவற்றுக்கு தனியாகவும், தங்கத்துக்கு தனியாகவும் கட்டணம் வாங்க வேண்டும். பெரும்பாலும் இன்றைக்கு அப்படி செய்வது கிடையாது. மாறாக, கல்லுடன் சேர்த்து 20 கிராம் எடை என்றால், 20 கிராம் தங்கம் என்று சொல்லி மொத்தமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

பேசாமல் வாங்கி வருகிறோம்
தெருவீதியில் பூ விற்கும் பெண்ணிடம் ஒரு முழம் பூ வாங்கும் போதும், காய்கறி விற்கும் பெண்ணிடம் அரைகிலோ காய் வாங்கும் போது பேரம் பேசும் பெண்மணிகள், நகைக்கடைகளில் போய் கடைக்காரர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு எதுவும் பதில் பேசாமல் வாங்கிக் கொண்டு வந்து விடுகின்றனர். எந்த அளவிற்கு ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே!












Click it and Unblock the Notifications