மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களை அடுத்த ஓராண்டுக்கு அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு சில நாட்களுக்கு முன்பு வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இந்திய மக்கள் வெளிநாட்டு பயணத்திற்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி டேட்டா
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவின்படி, 2026 மார்ச் மாதத்தில் இந்தியர்கள் வெளிநாட்டு பயணங்களுக்காக 1.09 பில்லியன் டாலர், தோராயமாக ரூ.10,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் இந்த செலவு 1.65 பில்லியன் டாலராகவும், பிப்ரவரியில் 1.3 பில்லியன் டாலராகவும் இருந்ததுள்ளது.
மார்ச் மாதத்தில் இது சிறிய அளவில் குறைந்திருந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது வெளிநாட்டு பயண செலவுகளுக்கு இந்தியர்கள் அதிகப்படியான டாலர்களை செலவு செய்து வருகின்றனர் என்பது ஆர்பிஐ டேட்டா மூலம் உறுதியாகியுள்ளது.
LRS மூலம் இந்தியர்கள் வெளிநாட்டில் செலவு செய்யும் பணத்தை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. பயணம், முதலீடு, உறவினர்களின் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த செலவுகள் நடைபெறுவதை ஆர்பிஐ தனது டேட்டா வைத்து ஆய்வு செய்து இத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்தியர்களின் வெளிநாட்டு பயண செலவுகளில் பெரும்பகுதி 'பிற பயணங்கள்' (Other Travel) எனப்படும் விடுமுறை மற்றும் சுற்றுலா பயணங்களுக்கே செல்கிறது. மார்ச் மாதத்தில் Other Travel பிரிவில் மட்டும் இந்தியர்கள் சுமார் 623.05 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளனர். இது மார்ச் மாதத்தின் மொத்த பயண செலவில் சுமார் 60 சதவீதத்தை கொண்டுள்ளது.
கல்வி தொடர்பான பயணங்களுக்கு 450.16 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இதில் படிப்புக்கான கட்டணங்கள் மற்றும் விடுதி செலவுகள் அடங்கும். வியாபார பயணங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் ஒன்றாக 21.39 மில்லியன் டாலராக மட்டுமே உள்ளன.
வெளிநாட்டில் வாழும் நெருங்கிய உறவினர்களுக்கு பணம் அனுப்பும் தொகை பிப்ரவரியில் 266.18 மில்லியன் டாலராக இருந்தது. மார்ச் மாதத்தில் இது 389.78 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு குறிப்பிடத்தக்கது.
அந்நிய செலாவணி மற்றும் ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்து வரும் நிலையில், வெளிநாட்டுக்கு செல்லும் பணம் அதிகரிப்பது அந்நிய செலாவணி கையிருப்பை பாதிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். இதனாலேயே தேவையற்ற வெளிநாட்டு பயணங்களைக் குறைத்து, டாலர் இருப்பை சேமிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications