பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்
டெல்லி: புதுச்சேரியின் பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் பழனிவேலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியிடம் காலில் விழுந்து வணங்கி பின்னர் பழனிவேல் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதை பெற்றுக் கொண்டார்.
புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கரங்களால், புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே. பழனிவேலுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புதுச்சேரியின் பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கே. பழனிவேல் தமிழர்களின் 5,000 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை உலக அளவில் கொண்டு சேர்த்ததற்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
மாஸ்டர் ராஜாராம் என்பவரிடம் சிலம்பம் கற்றுக் கொண்ட இவர், கடந்த பல தசாப்தங்களாகப் பின்தங்கிய சூழலில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகச் சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறார். உள்நாடு மட்டுமின்றி சர்வதேச மேடைகளிலும் சிலம்பக் கலைக்கான செயல்விளக்கக் காட்சிகளை நடத்தியுள்ளார்.
சிலம்பக் கலைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஏற்கனவே 2023-ல் மத்திய அரசின் 'சங்கீத நாடக அகாடமி விருது', 2012-ல் புதுச்சேரி அரசின் 'கலைமாமணி விருது' ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார். இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி விருது வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications