கேபிள் டிவி, டிடிஎச்சில் ஜனவரி 1 முதல் புதிய கட்டணம்- எத்தனை சேனல்களுக்கு எவ்வளவு தெரியுமா?
நாடு முழுவதும் கேபிள் டிவி கட்டணத்தை, ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கேபிள் டிவி கட்டணத்தை, ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை கண்டித்தும் டிஜிட்டல் ஒளிபரப்பை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க கோரியும், வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் நெட்வொர்க்குகளுக்கான புதிய கட்டண முறையை 2019 ஜனவரி 1 முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது. டிராய்க் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட் ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

இந்த முடிவை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் 2 வருடங்களுக்கு மேலாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் சென்ற வாரம் டிராயின் முடிவை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது.
ஆண்டனா மூலம் டிவி பார்த்தவர்களை கேபிள் டிவி மூலம் டிவி பார்க்க வைத்தனர். சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் கேபிள் டிவி மட்டுமல்லாது டிஷ் ஆண்டனா மூலம் டிவி சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கின்றனர் மக்கள். இவை அனைத்திலுமே எஸ்டி மற்றும் எச்டி பேக்கேஜ் முறையில் விரும்பிய சேனல்களை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெற்று வந்தார்கள்.
புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது இப்படிப் பேக்கேஜாகக் கட்டண தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியாது. ஆனால் இலவச சேனல்களை அடிப்படை பேக்கேஜ்களில் பார்க்க முடியும். ஆனால் இதற்கும் செட்-ஆப் பாக்ஸ் கட்டாயம்.
இலவச சேனல்களைப் பெறுவதற்காக டிராய் சில திட்டங்களை வகுத்துள்ளது. அதன் படி எவ்வளவு கட்டணம் செலுத்தினால் இலவச சேனல்களைப் பெற முடியும் என்பதை பார்க்கலாம்.
எத்தனை சேனல்கள் இலவசம் கட்டணம் எவ்வளவு:
1 முதல் 100 இலவச சேனல்களைப் பார்க்க 130 ரூபாய் உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
125 இலவச சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி சேர்த்து 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
150 இலவச சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 175 இலவச சேனல்களைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
200 இலவச சேனல்கள் வரை பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச சேனல் வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் கூடுதலாக ஜிஎஸ்டி எனத் திட்டம் நீள்கிறது.
சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன.
கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் கூடவே 18 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும்.
செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் டிவி சேவை பெற்று வந்தவர்கள் 2019 ஜனவரி 1ஆம் தேதிக்குள் அதை வாங்குவது நல்லது.
மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.
இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும், வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் ஜனவரி 1 முதல் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனிடையே இதனை கண்டித்தும் டிஜிட்டல் ஒளிபரப்பை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க கோரியும், வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications