ஒப்பந்தத்தை மீறி விற்பனை: ‘ஜெயில்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், படத்தை தயாரித்துள்ள கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை, ஒடிடி உரிமை,சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயில் படம் வரும் டிசம்பர் 9 ம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில்,தற்போது சட்டவிரோதமாக படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து ஜெயில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications