லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படை அமைக்க கோரி வழக்கு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி
அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தனியார்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அடங்கிய துறை உள்ளது. இவர்களுக்கு மேல் லோக் ஆயுக்தா அமைப்பும் உள்ளது. அரசு ஊழியர்கள், காவல்துறையினர், அரசு சாரா நிறுவனங்களில் உள்ளோர் லஞ்சம் வாங்கியது குறித்த தகவல் வந்தாலோ, லஞ்சம் கேட்பதாக புகார் வந்தாலோ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தாலோ லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தி திடீர் ரெய்டு நடத்துவார்கள்.
இவ்வாறு செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையில் வேகத்தைக்கூட்ட பறக்கும்படை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரிய வழக்கில் உள்ள நடைமுறைகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து வழக்கை தொடுத்தவர் வாபஸ் பெற்றதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில, மாவட்ட அளவில் ஊழலை தடுக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனைகள் நடத்தி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைப்பது குறித்து அரசு நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications