கருகிய குறுவை நெற்பயிர்.. நாகை மாவட்டத்தில் வேதனையில் விவசாயி உயிரிழப்பு
நாகை: நாகை மாவட்டம் திருவாய்மூரில் 15 ஏக்கரில் சாகுபடி செய்து இருந்த குறுவை நெற்பயிர் தண்ணீர் இன்றி கருகியதால் வேதனை அடைந்த விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பயிர்கள் கருக தொடங்கின. நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில், பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர். ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகின. குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 30,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நாகை மாவட்டம் திருவாய்மூரில் கருகிய நெற்பயிரால் வேதனையில் இருந்த விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். விவசாயி ராஜ்குமார் தனது 15 ஏக்கர் நிலத்தில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்து இருந்தார். கூட்டுறவு வங்கியில் 2.5 லட்சம் விவசாய கடன், எட்டுக்குடியில் ரூ.3 லட்சம், உள்ளூரில் ரூ.2 லட்சம் கடனாக வாங்கியிருந்த நிலையில் வேதனையால் விவசாயி ராஜ்குமார் உயிரிழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications