ஹரியானா தேர்தல்.. அதிருப்தியாளர்களால் கதி கலங்கும் பாஜக, காங்கிரஸ்.. கரை சேரப்போவது யார்?
சண்டிகர்: ஹரியானாவில் வரும் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமே அதிருப்தி வேட்பாளர்கள் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறார்கள். இந்த அதிருப்தி வேட்பாளர்களை சமாளித்து இரு கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வது இரண்டு கட்சிகளுக்குமே அக்னி பரீட்சையாக அமைய உள்ளது.
ஹரியானாவில் வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஹரியனாவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 29 பேரும், பாஜகவை சேர்ந்த 19 பேரும் சொந்தக்கட்சி நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராகவே களத்தில் குதித்து இருக்கிறார்கள்.

அதேவேளையில் இவர்களில் 7 தொகுதிகளில் போட்டியிடும் 15 பேரை காங்கிரஸ் சமாதானப்படுத்தியுள்ளது. அதேபோல பாஜகவை சேர்ந்த அதிருப்தி உறுப்பினர்கள் 6 பேர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்று விட்டார்கள்.. அதிருப்தியாளர்களை சரி கட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்பியுமான தீபேந்தர் சிங்க் ஹூடா ஈடுபட்டுள்ளார். பாஜகவில் முதல்வர் நயப் சைனி இதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
ஆனாலும் பாஜகவிற்கு எதிராக அதிருப்தியாளர்கள் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். இந்த 15 தொகுதிகளிலும் பாஜகவிற்கு அக்னி பரிட்சை காத்திருக்கிறது. இதில் முக்கியமானவர்கள் யார் என்று பார்த்தால், நாட்டின் கோடீஸ்வர பெண்மணி சாவித்ரி ஜிண்டால் ஆவார். இவருக்கு ஹிசார் தொகுதியில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் கமல் குப்தாவிற்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
அதேபோல ரானியா தொகுதியில் போட்டியிடும் பாஜக அதிருப்தி வேட்பாளர் ரன் ஜித் சிங்க், டாஷம் தொகுதியில் போட்டியிடும் ஷசி ரன் ஜன் பார்மர், கன்னாவுர் தொகுதியில் போட்டியிடும் தேவேந்திர கட்யான், பிரதிலா தொகுதியில் போட்டியிடும் தீபக் தாகர் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்..
பாஜகவுடன் ஒப்பிடும் போது காங்கிரஸ் கட்சிக்கே அதிக எதிர்ப்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். 20 தொகுதிகளில் 29 பேர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறார்கள்.. இவர்களில் முக்கியமானவர்கள் என்று பார்த்தால் பிரிதலா தொகுதியில் போட்டியிடும் நீது மான், பட்டோடி தொகுதியில் போட்டியிடும் சவுதரி, கோசாலி தொகுதியில் போட்டியிடும் மனோஜ் உள்ளிட்டோர் முக்கியமானவர்களாக உள்ளனர்.
அதேபோல பாஜகவிற்கு மற்றொரு தலைவலி என்னவென்றால் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழன்று கொண்ட கோபால் கோயல் கண்டா தான். ஹரியானா லோக்ஹித் கட்சியை நடத்தி வரும் இவர் பாஜக கூட்டணியில் இல்லை எனவும் பகுஜன் சமாஜ் கட்சி - ஐஎன் எல்டி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
இதையெல்லாம் சமாளித்து இரு கட்சிகளும் வரும் 5 ஆம் தேதியில் நடைபெற உள்ள தேர்தலில் அக்னி பரிட்சையை சந்திக்க உள்ளது. ஹரியானவில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 46 தொகுதிகளில் வெல்வது அவசியம்..வாக்கு எண்ணிக்கை வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications