பஞ்சாப்: பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டுப் படுகொலை செய்ததாக சந்தேகம்- சக வீரர் கைது!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களை சுட்டுப் படுகொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் சக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு சரமாரி துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டது. இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஒட்டுமொத்த ராணுவ முகாம், அதனை சுற்றிய பகுதிகளை ராணுவம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தீவிர சோதனைகளை நடத்தியது. இந்த சோதனைகளில் பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது.

இதனால் ராணுவ முகாமுக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு பயங்கரவாத தாக்குதல் அல்ல என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் பஞ்சாப் ராணுவ முகாமுக்குள் ஒரு ரைபிள் மற்றும் 28 தோட்டாக்கள் 2 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. பதிண்டா ராணுவ முகாமுக்குள் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் ராணுவ வீரர்கள் இருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், பதிண்டா ராணுவ முகாமில் 4 ஆர்ட்டிலரி யூனிட் வீரர்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிரிழப்பைத் தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை. ராணுவ முகாமும் பாதிக்கப்படவில்லை. அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கோணங்களிலும் பஞ்சாப் போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கி, தோட்டாக்கள் காணாமல் போனதற்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குமான தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேரில் விளக்கம் தர உள்ளார்.
இந்த நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் சக ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் மற்றொரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WATCH | Visuals from outside Bathinda Military Station where four casualties have been reported in firing inside the station in Punjab; search operation underway pic.twitter.com/jgaaGVIdMS
— ANI (@ANI) April 12, 2023












Click it and Unblock the Notifications