அடைந்தால் பஞ்சாப் முதல்வர் பதவி! இல்லையேல் காலிஸ்தான் தனிநாடு பிரதமர்- இப்படி சொன்னாரா கெஜ்ரிவால்?
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மேலும் ஒரு புதிய பஞ்சாயத்தாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை காலிஸ்தான் பயங்கரவாதி என முத்திரை குத்தி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலோ இதனை அசால்ட்டாக கடந்து செல்லும் வகையில் விளக்கம் அளித்து வருகிறார்.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நாளை மறுநாள் பிப்ரவரி 20-ல் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப்பில் இன்று மாலையுடன் பிரசாரம் முழுமையாக ஓய்வடைகிறது.
பஞ்சாப் தேர்தல் களத்தில் அடுத்தடுத்து தலைவர்களின் பேச்சுகள் சர்ச்சையாகி உள்ளது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி பேசுகையில், டெல்லி-பீகார்-உ.பி. பையாக்கள் பஞ்சாப்பை ஆட்சி செய்ய நினைக்கிறார்கள்.. அது நடக்காது என்றார். பையாக்கள் என்ற விமர்சனம் டெல்லி, உ.பி, பீகார் அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால் சரண்ஜித்சிங் சன்னி மீது பீகாரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலிஸ்தான் பிரதமர்?
இதற்கு அடுத்ததாக புதிய பூகம்பத்தை வெடிக்க வைத்திருப்பவர் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ்தான். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிக நெருக்கமான இருந்தவர் குமார் விஸ்வாஸ். இவரது வீடியோ ஒன்றை பாரதிய ஜனதா கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில், பஞ்சாப் முதல்வர் அல்லது காலிஸ்தான் தனிநாட்டு பிரதமராவதுதான் இலக்கு என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

சீக்கியர் தனிநாடு கோரிக்கை
காலிஸ்தான் என்பது சீக்கியர்களின் நீண்டகால தனிநாடு கோரிக்கை. காலிஸ்தான் தனிநாடு கோரிதான் பிந்தரன்வாலே ஆயுதப் போராட்டம் நடத்தினார். இந்த ஆயுதப் போராட்டத்தை பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி முடித்து வைத்தார் அன்றைய பிரத்மார் இந்திரா காந்தி. பிந்தரன்வாலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் பஞ்சாப் பொற்கோவிலில் ரத்த வெள்ளத்தில் சடலங்களாக மிதந்தனர். இதற்கு பழிவாங்கவே சீக்கியர்களால் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.

அப்படி சொன்னாரா கெஜ்ரிவால்?
காலிஸ்தான் கோரிக்கையை இன்னமும் வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான அமைப்புகளையும் நடத்தி வருகின்றனர். இன்னமும் நமது நாட்டுக்கு காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தால் அச்சுறுத்தல் இருக்கிறது என்கின்றன உளவு அமைப்புகள். இந்த நிலையில் அடைந்தால் பஞ்சாப் முதல்வர் பதவி.. இல்லையேல் காலிஸ்தான் தனிநாட்டின் பிரதமர் பதவி என கெஜ்ரிவால் கூறியதாக சொல்லப்படுவது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் சரண்ஜித்சிங் சன்னி.

கெஜ்ரிவால் விளக்கம்
அதேநேரத்தில் காலிஸ்தான் விவகாரத்தை அம்பலப்படுத்தியதால் குமார் விஸ்வாஸின் உயிருக்கு ஆபத்து என மத்திய அரசு கருதுகிறது என்கின்றன சில தகவல்கள். இதனால் குமார் விஸ்வாஸுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் கெஜ்ரிவால் தரும் விளக்கங்கள் இன்னும் விவாதங்களை கிளப்பி வருகின்றன. இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், அன்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பகத்சிங்கை பயங்கரவாதிகள் என்றனர். இன்று அதே பயங்கரவாத முத்திரையை எங்கள் மீது குத்துகின்றனர். வரலாறு திரும்பி இருக்கிறது. ஆனால் மக்கள் உண்மை என்ன என்பதை அறிவார்கள் என்றார். ஓயாத அக்கப்போர் பேரலைகள்!












Click it and Unblock the Notifications