பஞ்சாப் சட்டசபைத் தேர்தல்: ஜனவரி முதல் வாரத்தில் பிரதமர் மோடி பிரசாரம்- பிரமாண்ட ஏற்பாடுகள்!
சண்டிகர்: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்காக தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்தில் ஜனவரி முதல் வாரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில பாஜகவினர் செய்து வருகின்றனர்.
உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.

உ.பி. தேர்தல் களம்
தற்போதைய நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உ.பி. தேர்தலுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். உ.பி. மாநிலத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு திட்டங்களை தொடங்கியும் வைத்து வருகிறார்.

பஞ்சாப் பாஜக
ஆனால் பஞ்சாப் மாநிலத்தை பாஜக மேலிடம் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்கிற ஆதங்கம் அம்மாநில பாஜகவினரிடம் இருந்து வந்தது. பஞ்சாப்பைப் பொறுத்தவரையில் நீண்டகாலம் சிரோமணி அகாலிதளத்துடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தது. சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் விவகாரத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது அகாலி தளம். பஞ்சாப் காங்கிரஸில் இருந்து விலகிய மாஜி முதல்வர் அமரீந்தர்சிங்குடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் தொடர்ந்து நீடிக்கிறது.

தேர்தல் பிரசாரம்
இந்நிலையில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநில தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா? என்கிற விவாதம் அம்மாநிலத்தில் நடைபெற்று வந்தது. விவசாய சட்டங்களை வாபஸ் பெற்றுள்ள நிலையில் விவசாயிகளின் கோபம் தணிந்திருக்கிறது என நம்புகிறது பாஜக. இதனால் பிரதமர் மோடி ஜனவரி முதல்வாரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்வகிறார். பஞ்சாப் மாநிலத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்கின்றனர் பஞ்சாப் பாஜகவினர்.

பஞ்சாப் நிலவரம் என்ன?
பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில் இதுவரையிலான கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பிருப்பதாக கூறுகின்றன. அதேநேரத்தில் ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கலாம் என்கிற கணிப்பையும் முன்வைக்கின்றன. பஞ்சாப் தேர்தல் களத்தில் தற்போதைய நிலையில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகளிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications