மாணவிகளின் குளியல் வீடியோ லீக்... அப்படி எதுவும் நடக்கவில்லையென காவல்துறை மறுப்பு... மூவர் கைது
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களின் தீவிரம் குறையாத நிலையில் காவல்துறையினர் மாணவிகளின் குளியல் வீடியோ லீக் ஆன சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் அவரது காதலன் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.
மாணவிகள் குளிக்கும் காட்சிகள் ரகசிய கேமிரா மூலம் வீடியோவாக எடுக்கப்பட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக பரவிய தகவலையடுத்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பல்கலைக்கழகத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவலை மறுத்த காவல்துறையினர், தற்போது இதில் தொடர்புடையதாக கூறப்படும் மாணவி மற்றும் அவரது 23 வயதான காதலன் என மூவரை கைது செய்துள்ளனர்.

குளியல் வீடியோ
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாணவிகளும், பெற்றோரும் திரளான அளவில் பங்கேற்று திடீரென போராட்டத்தை முன்னெடுத்தனர். பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி பயிலும் மாணிவிகள் குளிக்கும் போது ரகசிய கேமிரா மூலம் அவர்களை வீடியோ எடுத்து அதனை தனது ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்ததாக சக மாணவி மீது குற்றம்சாட்டி இந்த போராட்டம் தொடங்கியது. மேலும் இந்த வீடியோவை பார்த்து ரசித்த மாணவியின் ஆண் நண்பர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

விசாரணை
இது கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் பலர் தற்கொலை செய்துகொண்டதாகவும், மேலும் சில மாணவிகள் தற்கொலை முயற்சி செய்ததாகவும் வெளியான தகவல்தான் மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபட தூண்டியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய இந்த போராட்டம் ஞாயிறு இரவு வரை நீடித்து வந்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பஞ்சாப் மாநில அரசு இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

கைது
விசாரணையில், இதுபோன்ற வீடியோ எதுவும் எடுக்கப்படவில்லையென்றும், அது யாருக்கும் பகிரப்படவும் இல்லையென்றும் காவல்துறை அறிவித்தது. மேலும் தனது தனிப்பட்ட வீடியோவை மாணவி தன்னுடைய 23 வயது காதலனுக்கு பகிர்ந்துள்ளார் என்பது மட்டும் தெரிய வந்தது. இதனையடுத்து மாணவி, சிம்லாவில் பணிபுரியும் அவரது காதலன் மற்றும் பேக்கரியில் பணிபுரியும் நபர் என மூவரையும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது.

காவல்துறை விளக்கம்
அதேபோல போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் காவல்துறை மாணவர்களிடையே தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. நேற்றிரவு காவல்துரை டிஐஜி புல்லார், மாணவிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சக மாணவிகள் குளிப்பது குறித்து எந்த வீடியோவும் எடுக்கப்படவில்லையென்றும், எனவே இது ஒரு வதந்தி என்றும் விளக்கினார். மேலும், இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை சரியாக செய்து வருகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதியில் குளிக்கும் மாணவிகளின் வீடியோக்கள் லீக் ஆனதாக கூறி மாணவிகளும் பெற்றோர்களும் இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications