தலித் என்பதால் பஞ்சாப் முதல்வரின் சகோதரருக்கு காங். சீட் தரலை... ஆம் ஆத்மி பகீர் விமர்சனம்
சண்டிகர்: தலித் என்பதாலேயே பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியின் சகோதரர் டாக்டர் மனோகர் சிங்குக்கு காங்கிரஸ் மேலிடம் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் தமக்கு எப்படியும் சீட் கிடைக்கும் என முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியின் சகோதரர் டாக்டர் மனோகர்சிங் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட விரும்பிய அவருக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. இதனால் டாக்டர் மனோகர் சிங் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
கேள்விக்கு பதிலில்லை! சிரித்தவாறே வழியனுப்பிய அமைச்சர் செந்தில்பாலாஜி! வேட்பாளர் தேர்வு ருசிகரம்!
தலித் எதிர்ப்பு
தற்போது இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில இணை பொறுப்பாளர் ராகவ் சாதா கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதில் தலித் எதிர்ப்பு நிலையை கடைபிடித்து வருகிறது.
முதல்வர் சகோதரருக்கு சீட் மறுப்பு
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள், அவர்களது உறவினர்கள் என பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது காங்கிரஸ் மேலிடம். ஆனால் தலித் தலைவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு வழங்க மறுக்கிறது. முதல்வர் சரண்ஜித்சிங் சகோதரர் மனோகர் சிங் தலித் என்பதால் அவருக்கு சீட் தரவில்லை காங்கிரஸ்.
தலித்துகளை அவமதிக்கிறது
காங்கிரஸ் மேலிடத்தின் இந்த நடவடிக்கையானது சரண்ஜித் சிங்கை மட்டும் அவமதிப்பது அல்ல. ஒட்டுமொத்த தலித் ஜாதியினரை அவமதிப்பதாகும். மகாராஷ்டிராவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் சுஷில்குமார் ஷிண்டே என்ற தலித்தை காங்கிரஸ் முதல்வராக்கியது. ஆனால் 2 மாதங்களுக்கு மட்டுமே அவர் பதவியில் இருந்தார். இதுதான் காங்கிரஸின் வரலாறு. இவ்வாறு ராகவ் சாதா கூறியுள்ளார்.
Recommended Video
கருத்து கணிப்புகள்
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். காங்கிரஸ் கட்சியும் கணிசமான இடங்களைப் பெறுமாம். ஆனால் பஞ்சாப்பில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்கின்றன அனைத்து கருத்து கணிப்புகளும்.