தலைநகர் டெல்லியின் பாரத்தை சுமக்கும் பஞ்சாப்.. மருத்துவமனைகளை தேடி ஓடும் கொரோனா நோயாளிகள்!
சண்டிகர்: டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால் அங்கிருந்து பஞ்சாப் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் செல்வது அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்தான் நாட்டின் மொத்த பாதிப்பில் பெரும் பங்கு உள்ளது.
"டார்ச்சர்".. நான் செத்துட்டா யாருங்க பொறுப்பு.. ஓடும் ஆம்புலன்ஸில் கதறி.. வீடியோ போட்ட கான்ஸ்டபிள்
நோயாளிகளின் பரிதாபம்
டெல்லியின் நிலைமை மிக, மிக மோசமாக உள்ளது. கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை படுக்கை வசதிகள் இல்லை. இதனால் பல மருத்துவமனைகளில் முன்புள்ள சாலைகளில் நோயாளிகள் காத்து கிடக்கும் நிலை உள்ளது. மருத்துவமனையில் இடம் கிடைத்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும்பாடாக உள்ளது.
பஞ்சாப்புக்கு படையெடுக்கின்றனர்
அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் தினமும் ஏராளமான நோயளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா தொடக்க காலத்தில் டெல்லியின் பக்கத்து மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளாமான நோயாளிகள் டெல்லிக்கு படையெடுத்து வந்தனர். தற்போது இந்த நிலை மாறி டெல்லியில் இருந்து பஞ்சாப் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் செல்வது அதிகரித்து வருகிறது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை
பஞ்சாபில் கொரோனா தினசரி பாதிப்பு டெல்லியை விட குறைவாக இருந்தாலும் தற்போது அங்கு ஏராளமான நோயாளிகள் படையெடுப்பதால் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாபில் திங்கள்கிழமை 6,318 புதிய பாதிப்புகளும், 98 இறப்புகளும் பதிவாகியுள்ளன. டெல்லியில் திங்களன்று 20,201 பாதிப்புகளும், 380 உயிரிழப்புளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கவலை உருவாகியுள்ளது
பஞ்சாப் மருத்துவமனைகளில் வசதிகள் அதிகம் இருப்பதால் அனைவரும் டெல்லியில் இருந்து இங்கே வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது என்று பஞ்சாப் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ''நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், பாதிப்புகளில் தொடர்ச்சியான உயர்வு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தை என்னால் கணிக்க முடியாது. மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் நாம் சிக்கலை காண வேண்டியதிருக்கும்'' என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.