தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் கொலையாளி: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சண்டிகர்: கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளி என ஹரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேரா சச்சா அமைப்பின் செல்வாக்கு மிக்க 10 பேர் கொண்ட குழுவின் உறுப்பினரான ரஞ்சித் சிங், 2002ம் ஆண்டு, ஜூலை 10ம் தேதி, நான்கு நபர்களால் சரமாரியாக துப்பாக்கியால் சட்டுக் கொலை செய்யப்ப்டடார்.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

காரணம் என்ன
சிபிஐ குற்றப்பத்திரிகையின்படி, தேரா சச்சா அமைப்பில் பெண் சிஷ்யைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒரு கடிதம் சுற்றி வந்ததாகவும் அதை ரஞ்சித் சிங்தான், பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்ததாகவும் எனவே ரஞ்சித்தை கொல்ல திட்டமிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

தள்ளுபடி
இந்த வழக்கு பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே, தன் மீதான கொலை வழக்கை வேறு சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி, குர்மீத் ராம் ரஹீம் சிங் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொலையாளி என தீர்ப்பு
இந்த நிலையில்தான், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது. குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் மற்ற ஐந்து பேரையும் ஐபிசி 302 (கொலை) பிரிவின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது அக்டோபர் 12 ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

பலாத்கார குற்றவாளி
குர்மீத் ராம் ரஹீம் சிங் தனது "ஆசிரமத்தில்" தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் அவர் இந்த வழக்கு தொடர்பாக 2017 இல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். இப்போது கொலை வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய அமைப்பு
தேரா சச்சா சவுதா எனும் மிகப்பெரிய அமைப்பை நடத்தி வந்தவர்தான் குர்மீத் ராம் ரஹீம் சிங். அந்த அமைப்பில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், தொழிற்சாலைகள், ஒரு சினிமா தியேட்டர் மற்றும் ஒரு சில தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறது இந்த அமைப்பு.

அடுத்த வாரிசு
சுமார் 12 மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் தேரா சச்சா சவுதாவுக்கு உள்ளன. இத்தகைய மிகப்பெரிய அமைப்பின் தலைவராக இருந்த குர்மீத் தற்போது சிறைக்கு சென்றுவிட்டதாலும், அடுத்த வழக்கிலும் குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளதாலும், தேரா சச்சா சவுதா அமைப்பின், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications