சோனமுத்தா போச்சா... வேளாண் மசோதா விவகாரம்.. கவிழ்கிறதா ஹரியானா பாஜக அரசு? துஷ்யந்த் கட்சி போர்க்கொடி
சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் மசோதா விவகாரத்தில் ஹரியானா பாஜக அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலையில் உள்ளது. ஹரியானா பாஜக அரசுக்கான ஆதரவை உடனே வாபஸ் பெற துஷந்த் சவுதாலாவின் கட்சிக்குள் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

அகாலிதளம் அதிரடி
விவசாயிகளின் இந்த கொந்தளிப்புக்கு அஞ்சியே, கால்நூற்றாண்டுக்கும் மேலாக பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வந்த சிரோமணி அகாலிதளமே நடுநடுங்கிப் போயுள்ளது. இதனால்தான் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அந்த கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார்.

ஹரியானாவில் கொந்தளிப்பு
இதேபோல ஹரியானா மாநிலத்திலும் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஹரியானாவில் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி). சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற முடியாத பாஜகவுக்கு தமது 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவை கொடுத்து ஆட்சியில் அமர்த்தியது இந்த கட்சிதான். இதற்காக துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவியும் கிடைத்தது.

துஷய்ந்த் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
தற்போது தங்களது பிரதான வாக்கு வங்கியான விவசாயிகள் தெருவில் இறங்கி போராடுகின்றனர். இந்த போராட்டக் குரலுக்கு மதிப்பு கொடுத்து பாஜகவை எதிர்க்க வேண்டும்; பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்பது ஜேஜேபி கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் குரல். இதனால் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹரியானா அரசு கவிழ்கிறது?
பாஜகவை பகிரங்கமாக துஷ்யந்த் கட்சி எதிர்த்தால் ஹரியானாவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு உடனே கவிழவும் வாய்ப்பு உள்ளது. ஹரியானாவில் பாஜக அரசு கவிழ்ந்தால் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி அரசு அமைப்பாரா துஷ்யந்த் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ஹரியானாவில் மட்டுமல்ல டெல்லி அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications