'விவசாயிகள் மண்டையை உடையுங்கள்' என்று கூறிய மாஜிஸ்திரேட்.. கடுமையாக பொங்கியெழுந்த ராகேஷ் திகைத்
சண்டிகர்: 'போராடும் விவசாயிகளை அடித்து மண்டையை உடையுங்கள்' என்று துணை நிலை மாஜிஸ்திரேட் கூறியதற்கு விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராடி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

ஹரியானா
அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அங்கு மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் மேற்கண்ட மாநிலங்களில் பா.ஜ.க எந்த கூட்டம் நடத்தினாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் முடிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று கட்டாரியா கர்னல் பகுதியில் இன்று நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வந்திருந்தார்.

போலீசார் தடியடி
அந்த பகுதியில் திரண்ட ஏராளமான விவசாயிகள் முதல்வருக்கு எதிராக போரட்டம் நடத்தினார்கள். அப்போது விவசாயிகளைக் களைக்க போலீசார் அவர்கள் மீது கொடூரமாக தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.இதில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்தனர். விவசாயிகள் மீதான இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

மண்டையை உடையுங்கள்
விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்துவதற்கு முன் விவசாயிகளை அடித்து மண்டையை உடைக்கும்படி போலீசாரிடம் துணை நிலை மாஜிஸ்திரேட் கூறும் வீடியோ வைரலாக பரவியது. இதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்கள். இந்த நிலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்க்காரி தாலிபானிகள்
ஹரியானாவின் நுஹில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:- நேற்று, ஒரு அதிகாரி (போலீஸ்காரர்களை) விவசாயிகளின் தலையில் அடிக்கும்படி உத்தரவிட்டார். அவர்கள் எங்களை காலிஸ்தானி என்று அழைக்கிறார்கள். நீங்கள் எங்களை காலிஸ்தானி மற்றும் பாகிஸ்தான் என்று அழைத்தால், சர்க்காரி தலிபானி நாட்டை ஆக்கிரமித்துள்ளதாக நாங்கள் கூறுவோம். அவர்கள் சர்க்காரி தாலிபானிகள். மாவோயிஸ்டுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இத்தகைய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று ராகேஷ் திகைத் கூறினார்.












Click it and Unblock the Notifications