பஞ்சாப் அரசு அதிகாரிகளை பிணை கைதிகளாக பிடித்த விவசாயிகள்.. நள்ளிரவு வரை நீடித்த திக்திக் சம்பவம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பயிர் சேதம் தொடர்பான விஷயத்தில் அரசு அதிகாரிகளை விவசாயிகள் பிணைக் கைதிகளாக வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கடந்த 2020இல் 3 புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தன. இருப்பினும், இந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் சுமார் ஓராண்டாகத் தொடர்ந்த நிலையில், அதன் பின்னரே விவசாய சட்டங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இருந்த போதிலும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகளுக்கு சில பிரச்சினை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

12 அதிகாரிகள்
இந்தச் சூழலில் பயிர் சேதம் தொடர்பான விவகாரத்தில் 12 அரசு அதிகாரிகளை பஞ்சாபில் விவசாயிகள் கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தின் லாம்பியில் உள்ள துணை தாசில்தார் அலுவலகத்தில் 12 அரசு அதிகாரிகளை விவசாயிகள் பல மணி நேரம் பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பல மணி நேரம் நீட்டித்த நிலையில், போலீசாரின் உதவியுடனேயே இறுதியில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விவசாயிகள் போராட்டம்
இந்தச் சம்பவம் நடந்த முக்த்சார் பகுதியில் பருத்தி விவசாயம் அதிகளவில் நடக்கும். அதுபோல பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செடிகள் இளஞ்சிவப்பு காய்ப்புழுவால் சேதம் அடைந்ததுள்ளது. இதனால் பருத்தி பயிரிட்டிருந்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அரசு அதிகாரிகள் மறுக்கவே, இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

நடந்தது என்ன
தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கடந்த திங்கள்கிழமை லாம்பியில் உள்ள துணை தாலுகா அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி உள்ளனர். அப்போது, மாலை நேரத்தில் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்து அதிகாரிகளை நள்ளிரவு வரை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மொத்தம் 12 அரசு அதிகாரிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்ததாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) சந்தீப் குமார் மாலிக் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். மேலும், நஷ்டஈடு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். இருப்பினும், போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்ததால் அரசு அதிகாரிகள் இரவு வரை பணயக்கைதிகளாக வைக்கப்பட்டனர் என்று மாலிக் தெரிவித்தார். அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு கருதி, முதலில் அவர்களைப் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார்
மேலும், விவசாயிகளுக்கு எதிராக போலீசார் தடியடி உட்பட எந்தவொரு வன்முறை முறையையும் பயன்படுத்தவில்லை என்றும் மாலிக் மறுத்தார். இது தொடர்பாக அவர் மேலும், கூறுகையில், "அதிகாரிகளைப் பாதுகாப்பாகவே விடுவிக்க வேண்டும் என்பதற்காக நிதானமாகவும் அமைதியாகவும் நடவடிக்கை எடுத்தோம். போலீஸ் ஃபோர்ஸை பயன்படுத்தவில்லை. நள்ளிரவில் அரசு அதிகாரிகளைப் பாதுகாப்பாக மீட்டோம். பின்னர் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

விவசாயிகள்
போராட்டத்தில் பங்கேற்ற மொத்தம் எட்டு முதல் ஒன்பது பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மாலிக் கூறினார். அதேநேரம் விவசாயிகள் இந்த விவகாரத்தில் போலீசாரை குற்றஞ்சாட்டி உள்ளனர். போலீசார் வன்முறையைப் பயன்படுத்திக் கூட்டத்தை கலைத்ததாகவும் அதில் குறைந்தது 6 விவசாயிகள் காயமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications