ஆம் ஆத்மி இறங்கி வந்தும்.. ஹரியானா காங்கிரஸ் கூட்டணியை சுக்கு நூறாக்கிய மாஜி சிஎம் ஹூடா-ராகுல் ஷாக்!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி-சமாஜ்வாதி இணைந்த மெகா கூட்டணியை உருவாக்க லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியைத் தழுவிவிட்டன. ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. இதனால் ஹரியானா காங்கிரஸும் தனித்தே போட்டியிட தயாராகி வருகிறது. ராகுல் காந்தியின் கூட்டணி முயற்சிகளை சுக்கு நூறாக தகர்த்து எறிந்தது யார் என்ற கேள்விக்கு அத்தனை விரல்களும் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை நோக்கித்தான் நீள்கின்றன.
ஹரியானா மாநிலத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பாஜக எதிர்ப்பு அலை: ஹரியானாவில் பாஜக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலை பெரும் சூறாவளியாகவே வீசுகிறது. இது தங்களுக்கு பெரும் சாதகம் என அசால்ட்டாக இருந்து வருகிறது காங்கிரஸ். ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த சோலோ வெற்றியைத் தடுக்கும் வகையில் ஆம் ஆத்மியும் ஹரியானாவில் களம்ம் காண்கிறது.
கூட்டணி முயற்சி தோல்வி: ஹரியானாவில் காங்கிரஸின் கைக்கு எட்டும் தொலைவில் உள்ள வெற்றியை ஏன் விடுவானே? என்கிற கேள்வியுடன் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணிக்கான முயற்சிகளை ராகுல் காந்தி முன்னெடுத்தார். இந்த முயற்சிகளால் ஹரியானாவில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி- சமாஜ்வாதி கட்சி என மெகா கூட்டணி உருவாவது உறுதியாகி வந்தது. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் இத்தகைய முயற்சிக்கு தொடக்க முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து பிடிகொடுக்காமல் இருந்து வந்தவர் மாஜி முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாதான். இதனால் திடீரென நேற்று ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாகவும் 20 பேர் கொண்ட வேட்பாளர்களையும் அறிவித்தது. இந்த அறிவிப்பால் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்தது. இன்றும் கூட ஆம் ஆத்மி 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆம் ஆத்மி நிலைப்பாடு: இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கையில், ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை 90 தொகுதிகளிலும் போட்டியிடுவதாகத்தான் அறிவித்தது. காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியதால் ஆம் ஆத்மியும் கணிசமான தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வந்தது. 15 தொகுதிகளையாவது காங்கிரஸ் ஒதுக்க வேண்டும் என்றது ஆம் ஆத்மி. அத்துடன் சில சட்டசபை தொகுதிகளை கட்டாயம் தந்தாக வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தது ஆம் ஆத்மி.
உடைத்த ஹூடா: ஆனால், எங்களுக்குதானே வெற்றி உறுதியாகிவிட்டது; அதை ஏன் உங்களுடன் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் ஹரியானா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர்சிங் ஹூடா, ஆம் ஆத்மியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை போட்டு வந்துள்ளார். ஆமாம்.. காங்கிரஸின் 'பெரியண்ணன்' மனப்பான்மையைத்தான் பூபிந்தர் சிங் ஹூடா வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் ஆம் ஆத்மியுடனான கூட்டணி முயற்சிகள் தோல்வியைத் தழுவி இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ராகுல் காந்திக்கு இந்த தகவல் கிடைத்த போது அதிர்ச்சி அடைந்து போனார் என்கின்றனர் சீனியர் காங்கிரஸ் தலைவர்கள். ஜம்மு காஷ்மீரில் வெற்றிகரமாக கூட்டணியை உருவாக்கிய ராகுல் காந்தியால் சீனியர் தலைவர்களை மீறி ஹரியானாவில் மெகா கூட்டணியை உருவாக்க முடியாமல் போய்விட்டது!












Click it and Unblock the Notifications