துஷ்யந்த் சவுதாலா போட்டியிட்ட தொகுதியில் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக- 'அப்பாவு' கதை போல!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஜேஜேபி கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா போட்டியிட்ட உச்சனகலன் தொகுதியில் பாஜக வேட்பாளர் தேவேந்தர் சத்தர்புஜ் அட்ரி வெறும் 32 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரிஜேந்திராவை வென்றிருக்கிறார். 2019 தேர்தலில் கிங் மேக்கராக உருவெடுத்த துஷ்யந்த் சவுதாலா மொத்தமே 7950 வாக்குகளை மட்டுமே பெற்று 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
2016-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் தற்போதைய சபாநாயகர் அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இதற்கு எதிராக 5 ஆண்டுகாலம் சட்டப் போராட்டம் நடத்தினார் அப்பாவு. 2021 தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்று சபாநாயகரானார் அப்பாவு.

ஹரியானா சட்டசபை தேர்தலிலும் இதேபோல சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெந்ற்றி பெற்றுள்ளார். ஹரியானாவின் விஐபி தொகுதிகளில் ஒன்றாக உச்சனகலன் தொகுதி கவனிக்கப்பட்டது. இந்த தொகுதியில் 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க உதவிக் கரம் நீட்டிய கிங் மேக்கர் துஷ்யந்த் சவுதாலா போட்டியிட்டதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்றைய வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே 4,5,6 வது இடங்களில்தான் முன்னேறி இருந்தார் துஷ்யந்த் சவுதாலா.
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் தேவேந்தர் சத்தர்புஜ் அட்ரி, காங்கிரஸ் வேட்பாளர் பிரிஜேந்திரா ஆகியோரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இறுதியாக பாஜகவின் தேவேந்தர் சத்தர்புஜ் அட்ரி, வெறும் 32 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவை ஏற்க முடியாது என்கிறது காங்கிரஸ் கட்சி. வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன; காங்கிரஸிடம் இருந்து வெற்றியைப் பறித்துக் கொண்டுவிட்டது பாஜக. ஹரியானா தேர்தல் முடிவுகள் மிகப் பெரும் அதிர்ச்சியை தருகின்றன என குமுறுகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.ஏற்கனவே தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் மிகவும் தாமதமாக வெளியிட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருந்தது.












Click it and Unblock the Notifications